Billie Jean ன் என்னுடைய காதலி இல்லை!
அந்த குழந்தைக்கும் நான் அப்பா இல்லை!

{Billie Jean is not my lover
She's just a girl who claims that I am the one
But the kid is not my son
She says I am the one, but the kid is not my son
}


1982,மைக்கல் ஜாக்சன் திரில்லர் ஆல்பம் வெளியிட்டு மிகப்பிரபலமாயிருந்த நேரம் அது.மைக்கேல் மின்னல் நடனக்காரர்.நேர்த்தியான உடல்வாகும்,ஸ்டைலும்,காந்தக்குரலும் எல்லோரையும் குறிப்பாக பெண்களை வெகுவாக கவர்ந்திழுத்தன.போகுமிடமெல்லாம் பெண் ரசிகைகள் தொடர்ந்தனர்.ஒருத்தன் வாழ்க்கையில் கொஞ்சம் மேலே வந்தாலே அவனின் உயர்ச்சியில் பங்கு போட ஓடி வருவது பெண் இயல்பு.உலக சூப்பர் ஸ்டார் மைக்கேலை சும்மா விடுவார்களா?ஆளாளுக்கு காதலியாக துடித்தனர்.ஒரு பெண் ஒரு படி மேலே போய் "எனது இரட்டைக்குழந்தைகளில் ஒன்றுக்கு மைக்கேல் தான் அப்பா" என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.அது மட்டுமில்லாது காதல் கடிதங்கள் கடிதங்கள் அனுப்பியும் லந்து பண்ண ஆரம்பித்து விட்டார்.

"நீங்கள் உங்கள் சொந்த பிள்ளையை புறக்கணிக்கக்கூடாது,நாமிருவரும் இணைந்து அதை வளர்த்தால் மிகவும் கவித்துவமான வாழ்க்கை எமக்கு கிட்டும்" என்று வலியுறுத்தி வந்தார்.இத்துணைக்கும் மைக்கேல் அந்த பெண்ணை நேரே கண்டது கூட இல்லை.தொடர்ச்சியாக வந்த கடிதங்கள் வந்து கொண்டிருந்த ஒரு நாளில் ஒரு பார்சலும் வந்திருந்தது.உள்ளே ஒரு துப்பாக்கியுடன் அந்தப்பெண்ணின் போட்டோ.கூடவே ஒரு கடிதமும்...

"இந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு உங்களை இந்த நேரத்தில்,இந்த நாளில் தற்கொலை செய்து கொள்ளுங்கள்,அதே நாளில் என்னையும் குழந்தையையும் அழித்துக்கொள்கிறேன்,அடுத்த பிறவியாலவது ஒன்று சேர்வோம்" என்று பீதியை கிழப்பி மைக்கேலின் நிம்மதியான தூக்கத்துக்கு வேட்டு வைத்தார்.பைத்தியம் என்று ஒதுக்கி விடாது அந்த ரசிகையின் படத்தை வீட்டில் மாட்டி வைத்தார் மைக்கேல் ஜாக்சன்.நீண்டகாலமாக தொடபேயில்லாது இருந்த அந்தப்பெண் மனநிலை பாதிப்புக்குள்ளாகி மனநிலை மருத்துவமனைக்கு அனுப்பப்டதாக பின்னாளில் அறிந்து கொண்டார்.இச்சம்பவத்தை மையமாக வைத்தே "Billie Jean" பாடலையும் எழுதி இருந்தார்.

பாடல் காட்சியமைப்பு மிக நுணுக்கமான கதை ஒன்றை சொல்லுவது போலிருக்கும்.அத்தோடு மைக்கேல் சக்தி கொண்ட மனிதனாக காட்டப்பட்டிருப்பார்.அவர் காலடி வைக்கும் இடங்களில் உள்ள "Tiles" ஒளிமயமாகும்.பின் தொடரும் புகைப்படக்காரனுக்கு உருவமாக தெரியும் அவர் நிஜத்தில் அரூபம்.மின்னல் தாக்கும் போது ஷோரூமில் இருக்கும் கமெரா ஒன்றின் தொழில்பாடு தூண்டப்பட வெளியாகும் புகைப்படத்தில் மைக்கேல் இல்லாதிருப்பதை குறியீடாக பார்வையாளனுக்கு காட்டி அதை விளக்கி இருப்பார்கள்."Billie Jean"என்ற பெண்ணை பற்றி பாடலில் சொல்லியபடி அவளின் இருப்பிடத்துக்கு செல்லும் மைக்கேலை பின் தொடர்ந்துவரும் புகைப்படக்காரன், "Bille Jean" அறையருகே மைக்கேல் மாயமாகி விட அங்கே வரும் போலீசால் அறையை வேவுபார்த்த குற்றத்துக்காக கைது செய்யப்படுவதோடு பாடல் முடிகிறது.

மைக்கேல் பிச்சையிட்டதும் ஒளிவெள்ளமாய் அழகான ஆடையோடு உருமாறும் பிச்சைக்காரன் பாடல் முடிவில் ஒரு பெண்ணோடு போவது,காலணியை துடைக்க பயன்படுத்திய வரிப்புலி துணி போலவே முதுகு வரிகளோடு பூனை ஒன்று ஓடுவது என அனுமாஸ்ய விடயங்கள் அழகாக கோர்க்கப்பட்டிருக்கும் இந்த பாடல் திரில்லர் ஆல்பத்தில் இடம்பெற அருகதையற்றதாக தயாரிப்பாளரால் ஒதுக்கப்பட்டிருந்தது.ஆனால் சற்றும் தளராத மைக்கேல் அதை 1983 இல் தனிப்பாடலாக வெளியிட்டார்.அப்பாடலின் வெற்றி தனிப்பாடல் ஆல்பங்களுக்கு ஒரு ஒரு தொடக்கமாக அமைந்தது என்றால் மிகையாகாது.பாப் உலகின் முடிசூடா மாமன்னன் மைக்கேல் ஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தருணங்களில் இவ்விடயத்தை பகிவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.(25/06/2009)


02/06/2008

02/06/2008 இனை மட்டம் 2003 ஐ சேர்ந்த எவரும் இலகுவில் மறந்து விட்டிருக்கமுடியாது.அன்று எமது மட்டத்துக்குரிய மொறட்டுவை பல்க்லையின் இறுதி நாள் கடந்து போனது.அதை தொடர்ந்து வந்த 06/06/2008 அன்று பல்கலை அருகே எமது மட்டத்தை சேர்ந்த சகோதர மொழி மாணவன் Gamunu Ratnayake உட்பட 21 உயிர்களை காவு கொண்ட கொடூர கிளைமோர் குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர் அப்பகுதிக்கு மீண்டும் செல்லும் அறவே வாய்ப்பு அற்றுப்போனது.




கெமுனு மிக அமைதியான நண்பன்.எல்லோரும் நன்றாக கதைப்பான்.இரவுப்பொழுதுகளில் விடுதியின் துணிகள் துவைக்கும் இடத்தில் அடிக்கடி அவனை காண நேரிடும்.ஆடைகள் கழுவிய படி அவனோடு உரையாடிய பொழுதுகள் நன்றாக நினைவில் இருக்கின்றன.திரைப்படங்கள் உருவாக்குவது தொடர்பிலான எனது ஆர்வம் குறித்து அவனுக்கு மிக நன்றாக தெரியும்."உனது படத்தில் எனக்கு ஒரு பாத்திரம் வேண்டும்" என்று ஒரு நாள் கேட்டு வைக்க "மச்சான்! ஒரு சிங்கள பெடியனே நம்ம பட்டத்தில நடிக்க விரும்பிறான்டா" என்று பெருமையாக பீற்றிக்கொண்டதும் மறக்கவில்லை.வெடித்து சிதறிய குண்டு அவன் முகத்தை சிதைத்துவிட்டிருந்ததாக பார்த்தவர்கள் சொல்ல கேட்டும், அவன் இறுதிநிகழ்வுக்கு கூட செல்ல இயலாத நிலவரம் குறித்து சிலாகித்தும் வருந்திய பொழுதுகள் கனமானவை.கடந்த மூன்றுவருடமாக மீளாத்துயிலில் உறங்குகின்ற அந்த நண்பனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

http://sundaytimes.lk/080608/News/news0017.html

யுத்தமில்லாத உலகமொன்றில் பிறவி எடுத்து மீள அந்த நண்பனை சந்தித்து பேசவேண்டும் என்பது தொடர்பிலான எண்ணங்கள் என்னுள் அணிவகுப்பதை என்னால் நிறுத்தமுடியவில்லை.இறந்த காலத்தினுள் போய் விருப்பமான நாட்களை மீள ஒரு முறை வாழ வேண்டும் என்ற அவா பல நாட்களாய் என்னுள் வியாபித்து இருக்கிறது.இது ஒரு வகையான மனநோயோ என்ற சந்தேகம் இருப்பினும்,அது எனக்கு பிடித்தமானதாக இருப்பதால் அது குறித்து அலட்டிக்கொள்லவில்லை.

இவ்வகையான எண்ணவோட்டம்தான் சில வாரங்கள் முன்பு ஒரு குறும் படத்தை உருவாக்குவதற்கானகருவை என்னுள் விதைத்தது.நேரமிருந்தால் ஒரு தடவை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.