
1939,புரட்டாதி.அடேல்ப் ஹிட்லருக்கு எதிராக யுத்தப்பிரகடனம் செய்து விட்டு பிரான்சும்,பிரிட்டனும் ஜெர்மனியோடு சொறிய தொடங்கியிருந்த காலம்.ஜெர்மனியின் "வேமாச்! இராணுவம் பெயரளவில் கொஞ்ச பேரை எல்லையில் நிறுத்தி விட்டு வடகிழக்கு பக்கமாக டென்மார்க்,நோர்வே என்று நாடுகளை வரிசையாக விழுங்கிக்கொண்டிருந்தது."எவ்வளவு அடிச்சாலும் நம்மை திருப்பியே அடிக்குதில்லையே.ரொம்ப நல்ல ஜெர்மனி" என்று புளகாங்கிதப்பட்டுப்பொயிருந்தனர் பிரெஞ்சு-பிரித்தானிய கூட்டுப்படைகள்.கூட்டணியின் மகிழ்சிக்கு காரணமாக இருந்தது 1928 ஆம் ஆண்டில் இருந்து இராணுவ வல்லுனர்கள் எல்லாம் றூம் போட்டு யோசித்து பார்த்து பார்த்து கட்டிய மஜினோட் எல்லைக்காவல் வேலி.நிலக்கீழ் விநியோக பாதைகளால் இணைக்கப்பட்ட சங்கிலித்தொடர் காவல் நிலைகளால் காக்கப்பட்ட மஜினோட் எல்லைக்கோட்டை கடக்க நினைப்பது என்பது ஜெர்மனி ராணுவத்தின் கூட்டுத்தற்கொலைக்கு ஒப்பானதாகும் என்ற கருத்தை ஜெர்மானியர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.உடைக்கவே முடியாத பிரான்சின் கவசத்தை உடைக்க,முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட அவமானத்தை திருப்பிக்கொடுக்க துடித்துக்கொண்டிருந்த ஹிட்லருக்கு ஒரு அசாத்திய திறமை கொண்ட தளபதி தேவைப்பட்டபோது கிடைத்தவர் தான் "கென்ஸ் குடேரியன்".

ஆள்,ஆயுத பலம் மிக்க ஒரு இராணுவத்தின் முன்னேற்றத்தை அதைவிட எண்ணிக்கையில் குறைவான இராணூவத்தைக்கொண்ட முறையாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரணால் தடுத்து நிறுத்த முடியும்.இப்படியான ஒரு தேக்கநிலைப்போர் முதலாம் உலக யுத்தத்தில் நீடித்தது.ஒரு தரப்பு முன்னேற முயல்வதுவும் மறுதரப்பு முறியடிப்பதுமாக தொடரும் இந்த யுத்தம் நாட்கள் செல்லச்செல்ல இழப்புக்களால் ஒருதரப்பு பலவீனமாகும் வரை நீளும்.முதலாம் உலகப்போரில் சமிக்கை படைப்பிரிவில் இருந்த குடேரியனுக்கு யுத்த இயந்திரம் ஒன்றின் பரிமாணங்கள் தொடர்பிலான தெளிவான பார்வை இருந்தது.சில மைல்களே,பலநூறு மைல்களோ போரிடும் முன்னரங்கு கொண்ட ஒரு ராணுவம் / படைப்பிரிவு அதைவிட ஆழமான,பரந்துபட்ட பின்புலத்தை கொண்டிருக்கும்.அப்பின்புலம் நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் விமானத்தளம் தொடக்கம் பல மைல்களுக்கு அப்பாலிருந்து சூட்டாதரவை தரும் பீரங்கி நிலைகள் வரை பரந்திருக்கும்.முதலாம் உலகப்போர் அணைகளுள் தரித்து நின்ற போது பிரித்தானிய படைகள் "மார்க்" வகை டாங்கிகள் மூலமாக உடைப்பை ஏற்படுத்தி அதனூடு தரைப்படைகளை புகுத்தும் யுக்தியை முதன் முதலில் கையாண்டு குறிப்பிட்ட சில வெற்றிகளை பெற்றிருந்தார்கள்.ஆனால் இம்முறை மூலம் எதிரணியை சில மைல்கள் தூரமே பின் தள்ள முடிவதுடன்,பதில் நடவடிக்கை எடுக்கப்படும் போது உட்புகுந்தவர்கள் துண்டிக்கப்படும் அபாயமும் இருந்தது.குடேறியன் இந்த யுக்தியை மெருகேற்றினார்.அசாத்தியம் என கருதப்பட்ட எல்லைக்கோடுகளில் உடைப்பை ஏற்படுத்தி எதிரிநாட்டுக்குள் ஆழமாக உட்புகுந்து முன்னரங்க படைகளை தனிமைப்படுத்தி அழித்தொழிக்கும் சிந்தனையை நடைமுறைப்படுத்த நகர் திறன் கூடிய-இயந்திரமயமாக்கப்பட்ட இராணுவத்தை வடிவமைக்க வேண்டுமென சொன்னார்.அது சாத்தியப்பட யுத்த தாங்கிகள் எப்படியான வல்லமையை கொண்டிருக்க வேண்டும்,ஒவ்வொன்றும் கட்டளைப்பீடத்தோடு றேடியோ தொடர்புகளை கொண்டிருக்க வேண்டும்,ஒவ்வொரு தாங்கியோடும் சிறிய சுயாதீன முடிவுகள் எடுக்கவல்ல அணிகள் இருக்கவேண்டும்,நகர்வின் இடர்பாடுகளை களையும் துல்லியமான வான் வழி தாக்குதல் விமானங்கள் எப்படி தொழில்பட வேண்டும் என்று ஏராளமான போரியல் நுணுக்கங்களை உள்ளடக்கிய அவரது "Achtung – Panzer" என்ற நூல் 1937 இல் வெளிவந்தது.

மஜினோட் காப்பரண்களை கடக்க முடியாதபடியால் ஜேர்மானியர் வடக்கு பெல்ஜியம்/நெதர்லாந்து (ஹொலண்ட் பிராந்தியம்) ஊடாக நுழைந்து பாரிசை நோக்கி முன்னேறுவர் என கூட்டணியினர் கணக்கு போட்டிருந்தனர்.அப்படி நடக்கும் பட்சத்தில் தயாரக இருக்கும் தாக்குதல் படையினரை உள்ளே இறக்கி Meuse,Dijle ஆறுகளின் மறுகரையில் ஜெர்மானியரை முடக்கும் தருணத்துக்காக காத்திருந்தனர்.எதிர்பார்த்தபடியேதான் 10,மே,1940 அன்று தாக்குதல் தொடங்கியது.அடித்து தூள் கிளப்பலாம் என்று பெல்ஜியத்துக்குள் கூட்டுப்படைகள் பாய்ந்தார்கள் பிரதான களமுனை அவர்களுக்கு தென்கிழக்காக இருந்த ஆடன்ஸ் வனப்பகுதியில் திறக்கப்பட்டிருந்தை அறியாமல்.மலையும்,காடுகளுமாய் இருந்த அப்பகுதி கனரக ஆயுதங்கள் நகர்த்தப்பட கடினமானது என்பதால் கூட்டணியினர் பெரியளவில் படைகளை அங்கே நிறுத்தவில்லை.ஆறுகளுக்கு குறுக்காக பொறியியலாளர்கள் பாலங்களை கட்ட குடேறியனின் மின்னல் தாக்குதல் தொடங்கியது.அத்தாக்குதலின் முனை அளவில்லா வலிமையை கொண்டிருந்தது.அதனை மழுங்கடிக்க மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சியையும் அது அழித்தொழித்தது.குறுக்கே வரும் எதிரணியின் பெரும் தடைகள் செறிவான,துல்லியமான விமான தாக்குதல் உதவியோடு அழிக்கப்பட்டது.அதன் பின் நீண்டு வந்த விநியோத்தை குறுக்கறுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை கவசப்படைகளால் தகர்க்கப்பட்டன.மூன்று நாட்கள் கழிந்த போது இந்த போரிடும் முனை உடைப்பை ஏற்படுத்திய இடத்திலிருந்து 70 கிலோமீற்றர்கள் தொலைவில் நின்றது.அங்கிருந்து குடேறியன் ராணுவம் கடற்கரைப்புறமாக திரும்பி நகர ஆரம்பித்ததும் பெல்ஜியத்துக்குள் பாய்ந்தடித்து ஓடிய கூட்டுப்படைகளுக்கு ஆப்பு விழுந்துவிட்டது என்பது விளங்க தொடங்கியது.வெகுவேகமாக ஓடிவந்து குடேறியனை தடுக்கப்பார்த்தார்கள்.கனமான, வேகம் குறைவான கூட்டுப்படைகளின் கவச வாகனங்கள் ஜெர்மானியர்களின் நவீன கவசங்களுக்கு இணையாக இல்லை.குடேறியனின் படைகளும் பெல்ஜியத்தினூடு முன்னேறிவந்த படைகளும் இருமுனைகளில் நெருங்க கூட்டணிப்படைகள் ட்ரங்கிட் துறைமுகத்தை நோக்கி ஓடத்தொடங்கின.

இப்போது ஆண்டுகணக்கில் கட்டிய மஜினோட் எல்லைக்கோடு தனித்துப்போய் நின்றது.அதனை உருவாக்கிய இராணுவவல்லுனர்களின் சிந்தனையை ஏளனத்துக்கு உரியதாக மாற்றிவிட்டிருந்தது குடேறியனின் ராணுவம்.சில நாட்களில் மஜினோட் எல்லைக்கோடு காப்பரண்கள் "ஒப்பரேசன் டைகர்" என்ற துடைத்தழிப்பு நடவடிக்கை மூலம் இலகுவாக ஜெர்மானிய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.400 000 கூட்டுப்படைகள் ட்ரங்கிட் துறைமுகத்திலிருந்து தப்பியோட தொடங்கின.அழித்தொழிப்பு சமரை நிகழ்த்த விடாமல் ஹிட்லர் படைகளை துறைமுகத்திலிருந்து 10 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நிறுத்திவைத்தார்.பிரித்தானியர்கள் "வைகிங்" என்ற ஜெர்மானிய இனத்திலிருந்து வந்தவர்களாதலால் அவர்களை அழிக்க ஹிட்லர் விரும்பவில்லை, அழித்தொழிப்பு சமரின் போது கணிசமான அளவு ஜெர்மானிய படைகளை இழக்க நேரிடும் - இழப்பில்லாத பிரான்ஸ்சின் மீதான வெற்றி அரசியலுக்கு தேவைப்பட்டதால் தப்பியோடிய படைகளை ஹிட்லர் தடுக்கவில்லை என பல காரணக்கள் சொல்லப்பட்டன.உலக யுத்தம் முடிந்தபின் "ஜெர்மனி போருக்கான ஆயத்தங்களை ஆண்டாண்டுகளாக செய்து வந்ததாகவும்,தமது தரப்பு ஆயத்தமின்றி இருந்ததாகவும்" கூட்டுப்படைகள் தமது தோல்விகளுக்கு விளக்கம் சொல்லி வரலாற்றை எழுதின.ஆனாலும் பிரித்தானியாவும்,பிரான்சும் யுத்தப்பிரகடனம் செய்த பிறகு தான் ஜெர்மனி தாக்கவாரம்பித்தது.கூட்டுப்படைகளிடம் இருந்ததை விட ஆள்,ஆயுத பலத்தில் ஜெர்மனி சிறியதாகவும் இருந்தது.ஆனால் தலைமைத்துவமும்,போரியல் யுக்திகளுமே வெற்றியை தீர்மானித்தன.

குடேறியன் தொடக்கிய மின்னல் யுத்தம் "Third reich" எல்லைகளை ஓராண்டுக்குள் ஐரோப்பா முழுவதுவும் விரிய வைத்தது.ரஸ்யா மீதான "operation barbarossa" தோல்வியடைந்தமைக்கு காலநிலை,ஆயிரக்கணக்கான மைல்களுக்கு நீண்ட விநியோக வழி என பல காரணமாய் இருந்தாலும் இறுதி வரை "blitzkrieg" வீரியமான தாக்குதல் முறையாகவே இருந்தது.ஆயினும் அது 1:10 என்ற மிகப்பெரும் எதிரணி விகிதத்தால் முடக்கப்பட்டது.

சூரியன் மறையாத சாம்ராஜ்யமான பிரித்தானியா கீழே இறங்குவதற்கும்,இந்தியா உள்பட்ட கீழைத்தேய நாடுகள் சுதந்திரமடையவும்,பிரான்சை வல்லரசு என்ற நிலையில் இருந்து சாதாரண நாடாக்குவதற்கும் குடேறியன் ஒரு பிரதான மறைமுக காரணியாக இருக்கிறார்.வல்லரசுகள் எல்லாம் சிதைந்து போயிருக்க சண்டையே பிடிக்கத்தெரியாத சப்பை அமெரிக்கா உலக சண்டியனாகியதற்கும் குடேறியனின் மின்னல் யுத்தமே காரணம்.பெட்டியடித்தல்,ஊடறுத்தல் என நாம் கேள்விப்பட்டவை எல்லாம் "Blitzkrieg" இனது வடிவங்கள் தான்.சிறிய ராணுவம் உலகையே பந்தாடிய விந்தையை சாத்தியப்படுத்திய ஹென்ஸ் குடேறியன் ஒரு நேர்மையான போராளி.யுத்த இறுதி நாட்களில் தோல்வியடைந்த ஒரு நடவடிக்கையை கையாண்ட விதம் குறித்து வாக்குவாதப்பட்டதால் ஹிட்லர் கட்டாய ஓய்வில் அனுப்பி வைத்தார்."Third reich" வீழ்ந்த பின்னர் அமெரிக்க ராணுவத்திடம் சரணடைந்தார்.போர்குற்ற விசாரணைகளில் நேர்மையான ஒரு ராணுவ வீரராக கடமையை செய்ததாக கருதப்பட்டு விடுவிக்கப்பட்டார்.பல ராணுவங்களுக்கு ஆலோசகராக கடமையாற்றி 14.மே,1954 இல் காலமானார்.