வவுனியாவில் நடந்த சம்பவம் மெலிதாக பல்கலைக்கழகத்துள்ளும் கசியத்தொடங்கியிருந்தது."அது எப்படி நீங்கள் போகிற இடத்தில் மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது?" என்று வேறு சிலர் நேரடியாக கேட்டு வேறு பீதியை கிளப்பினார்கள்.வடபகுதி அடையாள அட்டை வைத்திருப்பது மட்டுமே கைது செய்யப்பட போதுமானதாக இருந்த நாட்களில் மனநோயாளியான உம்சாந்தியின் தந்தை பல்கலைக்கழக கவுன்சிலரான வணிகதுங்கவிடம் வந்து முறைப்பாட்டை தாக்கல் செய்தான்.2007 சங்கமம் நூலில் இருந்த புகைப்படத்தை எடுத்து அரைவேக்காட்டு வணிகதுங்க பிரச்சினையை உருவாக்கும் பேர்வழிகளை காட்டும்படி கேட்டுக்கொள்ள உம்மாசாண்டி என்னையும் கமல்சையும் சுட்டி வழக்குக்கு பிள்ளையார் சுழியை போட்டு வைத்தாள்.விரிவுரை முடிந்து மதிய உணவுக்கு போவதற்கு தயாராகிக்கொண்டிருந்த ஒரு மதியம் வணிகதுங்கவிடம் இருந்து அழைப்பு வந்தது.
வெருளிக்கு நாகரிக உடை அணிவித்தது போல இருக்கும் வணிகதுங்க தன்னை ஒரு அறிவாளியாக காட்டுவதற்கு எடுக்கும் சிரத்தை விரிவுரை மாணவர்களுக்கு விளங்கவேண்டும் என எடுக்கும் கவனத்திலும் அதிகமாவே எப்போதும் இருப்பதாய் கருதி நான் அடிக்கடி கடுப்பாவதுண்டு.அவனது அறைக்குள் போனதும் "நீ ஒரு பெண்னை பின் தொடர்வதாகவும் பௌதீக ரீதியாக அவளை அணுக முயல்வதாகவும் எங்களுக்கு முறைப்பாடு வந்திருக்கிறது.அந்த பெண்ணைப்பார்த்தேன்.அழகான குணமான பெண்.ஆனால் நீ அவளை பிழையான விதத்தில் அணுகுகிறாய் என நினைக்கிறேன்" என்று பெரிய உளவியலாளர் பருப்பு போல கதைத்துக்கொண்டு போனான்.எனக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த உருவத்தை அழகு என்றதும் அதன் பின்னால் நான் செல்வதாக கூறியதும் படுபயங்கரமான கோபத்தை ஏற்படுத்தின.வணிகதுங்கவிடம் வாதிடத்தொடங்கினேன்.இலங்கை அரச பல்க்லைக்கழகங்களில் விரிவுரையாளர் சொல்வதை மறுத்து உரையாடுவது மிக அரிதானது.இருந்த போதிலும் அபாண்டமாக பழி சுமத்தப்பட்டதை பொறுக்கமுடியாமல் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தை வைத்து போராடினேன்.வணிகதுங்க விடுவதாக இல்லை.இது பெரிய பிரச்சினையை உருவாக்கப்போக்றது.மேன் மேலும் அதை வளர்க்காமல் இருக்கவேண்டுமானால் அந்த பெண் பின்னால் செல்லாதே என்று கூறிவிட்டு போகும் படி சொல்லிவிட்டான்.
விடுதிக்கு வந்தவுடன் நண்பர்களுக்கு அழைப்பை போட்டேன்.எல்லோரும் ஒவ்வொரு திக்கில் நின்றார்கள்.அலியப்பா மோட்டார் சைக்கிளில் அடுத்த ஐந்தாம் நிமிடம் அறையில் நின்றான்.விசரியின் வீட்டு விலாசத்தை ஒரு தெரிந்த நண்பரிடம் இருந்து எடுத்தாகிவிட்டது."விட்டா நாளைக்கு பிள்ளைய நீ குடுத்திட்டாய் எண்டும் சொல்லுவாள் போல கிடக்கு" என்று வேறு அலியப்பா பீதியூட்டினான்.ஒரு வேளை வேற யாராவது பின்னால போய் ஏதாவது பண்ணிட்டு சிக்கலாகின உடன என்ர பெயர போட்டுகொடுத்திட்டு மாறிட்டானோ தெரியேலை.ஆனா புத்தகத்தில் என்ர படத்த தெளிவா காட்டியிருக்கிறாளே!.ஏதாவது பார்வை கோளாறு உள்ளவளா இருப்பாளே!.வகைவகையாக யோசித்துக்கொண்டிருக்கும் போதே அலியப்பாவின் பைக் சொய்சாபுரத்தையும் தாண்டி பறக்க தொடங்கிவிட்டிருந்தது.
பிளட்ஸ் வாசலில் நின்ற காப்போனிடம் விபரங்களை கொடுத்துவிட்டு உள்ளே போய் கதவை தட்டினோம்.
"நான் சுகந்தமாறன்.மொறட்டுவை யூனிவெர்சிட்டியிலிருந்து வந்திருக்கிறேன்.நான் உங்கள் மகளுக்கு பிரச்சினை கொடுத்ததாக முறைப்பாடு கொடுத்துள்ளீர்கள்.பெயர் மாறி கொடுத்துவிட்டீர்களொ தெரியவில்லை.அதை கேட்டறியவே வந்துள்ளேன்"
"எதுக்கும் கீழே போய் நில்லும்.நான் வருகிறேன்" சொல்லிவிட்டு கதவை அடிச்சு சாத்தியவன் உம்சாண்டியின் தந்தையாகயாக இருக்கவேண்டும் என்பதை ஊகித்துக்கொண்டு கீழிறங்கி வந்தோம்.
ஐந்தாவது நிமிடம் சிகெரெட்டை புகைத்தபடி ஒரு சிரிப்பு ரவுடிக்குரிய பாவனைகளோடு கீழே இறங்கி வந்தவன் ஆக்ரோசமாக கத்ததொடங்கினான்.
"நீங்கள் வவுனியாவில வெடியில அம்பிட்டது கேள்விப்பட்டவிடனயே திட்டத்தை போட்டுட்டன்டா! உன்ர வரலாறே எனக்கு தெரியும்.உன்ர குடும்பம் எங்க இருக்குது? என்ன செய்யுது என்றும் தெரியும்.சரியா ஆளுக்கு எதிராகத்தான் முறைப்பாட்டை கொடுத்து இருக்கிறேன்.அங்க வழக்க போட்ட உடன ஓடி வந்து கதவை தட்டி காலில் விழவச்சன் பார்த்தியோ.இனித்தான்ரா மிச்சம் இருக்கு" என்று சொல்லிவிட்டு வெறித்தனமாக மனநோயாளிபோல சிரிக்கத்தொடங்கினான்.அலியப்பா என்னை தடுத்துவிட்டு சமாதானம் போசத்தொடங்கினான்.எதையுமே அவன் காலில் விழுத்தாமல் என்னை ஒரு பாலியல் குற்றவாளி ரீதியில் அவன் பேசிக்கொண்டு போக நானும் வாய்த்தர்க்கத்தில் இறங்கிவிட்டேன்."இவனோடு பேசிப்பிரியோசனமில்லை வாடா போவம்" என்று பைக்கில் பாய்ந்து ஏறி ஓடித்தப்பும் வரை அவனது பேய்சிரிப்பும் நிற்கவில்லை.
புதிய விடுதியில் இன்றைய இரவு சந்திப்பு பெரியதாக இருந்தது.மங்கோவைத்தவிர அனைவரும் நடந்ததை கேள்விப்பட்டு வந்திருந்தார்கள்.ரெக்ஸ்டைல் சிங்களபெட்டையள் விசயத்தை கேள்விப்பட்டுட்டு "சுகி மேல பாலியல் வழக்கா?,வாய்ப்பே இல்லை.பெண்ணா போனாலும் அவன் ஓடியிருப்பானே?" என்று சொன்னதை மீட்டி என்னை சிரிக்கவைக்க நண்பர்கள் முயன்று கொண்டிருந்தார்கள்.நெருங்கிய நண்பர்கள் ஆளுக்கொவ்வொரு விதமாய் மனதில் பட்டதை சொன்னார்கள்.சிப்லி "என்ன தான் இருந்தாலும் ஒரு பெட்டை இப்படி வழக்கை போட்டிருக்கெண்டா ஏதோ நடந்திருக்கு.உண்மைய சொல்லிடு மச்சான்" என்று வேறு கேட்டு கடுப்பேத்தினான்.என்மீது பிறர் அனுதாபம் காட்டுவதை விரும்பாத போதும் இவ்வளவு நண்பர்களும் ஆதரவாக இருக்கிறார்களே என்பதை நினைக்க ஆறுதலாக இருந்தது.விடிகாலையில் காவல்துறைவாகனம் ஒன்று "வீடு புகுந்து கொலை முயற்சிக்கு முயன்றனர்" என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் என்னையும் வசந்தனையும் கைது செய்ய கம்பஸ் வாசலில் வந்து நிற்கபோகிறது என்பதை அறிய வாய்ப்பில்லாத நான் அன்றிரவு நிம்மதியாக உறங்கிப்போனேன்.
(வழக்கு நீளும்.பாகம் 5 வெகு விரைவில்)





