முடிவில்லா இணைய தகவல் களஞ்சியத்தினை கூகிள் தேடுபொறி மூலம் சல்லடை போடுகையில் தென்பட்ட சில பைட்டுக்கள் கூட பெறாத அந்த விவகாரமான விளம்பரம் பார்த்தவுடன் கவனத்தை ஈர்த்தது.கார் விற்பவர்கள்,வீடு வாடகைக்கு விடுபவர்கள்,பிரத்தியோக ரியூசன் கொடுப்பவர்கள் என்றிருந்த சாதாரண விளம்பரங்களிலும் படம்வரைய நிர்வாண மாடல்கள் தேவை ,ஜிம் பயிற்றுனராக அழகான பெண் தேவை,ஹொலிடே கூட்டி செல்ல கட்டுடல் ஆண் தேவை என்றிருக்கும் வகையறாக்களே மலரவன் கவனத்தை அதிகம் ஈர்ப்பதுண்டு.ஆனாலும் இன்று புதிதாக வந்திருந்த "எனது மனைவியை இயற்கை வழிகளில் கர்ப்பமாக்க பரிபூரணமான ஆண்மகன் தேவை" என்ற அழைப்பு மொத்த கவனத்தையும் தன் பால் இழுத்து விட்டிருந்தது.உயிரணு வழங்கி ஒருவர் மூலம் செயற்கையாகயாக கருத்தரிப்பது புதிதான விடயமில்லை.இயற்கையான உறவின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடும் முதிர்கன்னிகள் பற்றியும் மலரவன் கேள்விப்பட்டதுண்டு.இது தவிர லெஸ்பியன் தம்பதிகள் குழந்தை பெற மட்டும் சிறப்பான உயிரணுக்களை வழங்க கூடிய ஆண்களை நாடுவது வழமை.ஆனாலும் ஒரு இங்கிலாந்து வாழ் தென்னாசியன் தனது மனைவியோடு இயற்கை உறவு வைத்து குழந்தை பெற பிற ஆண்களுக்கு அழைப்பு விடுத்து விளம்பரம் போடுகிறான் என்றால் பின்னால் ஏதோவொரு மர்மம் இருப்பதாக உள்ளுணர்வு எச்சரித்தது.ஆயினும் இவ்வாறான விடயங்கள் குறுக்கிடும் போது உருவாகும் அதீத ஆர்வம் உந்தித்தள்ள மூளையின் கட்டளைக்கு காத்திராமல் விரல்கள் அந்த விளம்பரத்துக்கு பதிலெழுத தொடங்கிவிட்டிருந்தன.




திங்கள் கிழமை தொடங்கி வெள்ளி வரை அசுர வேகத்தில் நகரும் இயந்திர நாட்கள் முடிந்து ஓய்வாக படுக்கையில் சரிந்த போது மீள அந்த விளம்பரம் நினைவுக்கு வந்தது.இப்படியான வேலைகளுக்காகவே வைத்திருக்கும் மெயில் பெட்டியை திறந்து பார்க்க பதில் இருந்தது.


"உங்கள் விண்ணப்பம் கிடைத்தது.புகைப்படம் அனுப்ப முடியுமா?".


இரண்டு புகைப்படங்களை தரவேற்றம் செய்து அனுப்பி சில நிமிடங்களுக்குள்ளாகவே மீள இன் பாக்ஸ் மிளிர்ந்தது.


"நீங்கள் பொருத்தமானவராகா இருப்பீர்கள் என நினைக்கிறேன்.முடியுமானால் அலைபேசி இலக்கம்?".


அனுப்பியதும் ஒலிக்கதொடங்கிய கைத்தொலைபேசியை வெகு எச்சரிக்கை உணர்வோடும்,ஆப்பு குறித்த விழிப்புணர்வோடும் கழிவறைக்குள் ஒதுங்கி காதுகளில் பொருத்தியதும் எதிர்முனையில் பேசிய ஆண்குரலில் அதீத மென்மை இருந்தது.

"எனது பெயர் பவல் நாத்.இந்த விடயம் மிகவும் உணர்வு பூர்வமானது.நீங்களும் இதை விளையாட்டாக கருதவில்லை என்று நினைக்கிக்கிறேன்" என்று தொடங்கி நீண்ட அறிமுக பேச்சு முடியும் போது "அட இவன் ரொம்ப நல்லவன்" என்ற பிம்பத்தை கிட்டத்தட்ட எனக்குள் ஏற்படுத்தியிருந்தான்.

"பவல் நாத்! எனது பெயர் மலரவன்!,எனக்குள் இது தொடர்பில் சந்தேகங்கள் இருக்கின்றன.இந்த விடயத்தில் உடன்பட முன்னர் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்போகிறேன்.முதலாவதாக "நீங்கள் ஒரு குழந்தையை உருவாக்கும் ஆற்றல் அற்றவர் என்றால் டொக்டர் உங்களை விந்தணு வங்கி உதவியை நாடும்படி பரிந்துரைக்கவில்லையா?".

நல்ல கேள்வி என்று சொல்லிவிட்டு சிரித்துகொள்கையில் அவன் பதிலுக்காக கால அவகாசம் எடுத்துக்கொள்வது புரிந்தது.

"மலரவன்! நீங்கள் எல்லா விடயங்களும் அறிந்தவராக இருக்கிறீர்கள்,டொக்டர் அப்படி சொல்லிவிட்டு இன்னொரு விடயமும் சொன்னார்.செயற்கை முறையாக உருவாக்கப்படும் குழந்தையில் வெறும் பொம்மை போல இருக்குமேயன்றி அதில் உயிரோட்டம் இருக்காது.உணர்வுகள் நிரம்பிய குழந்தை நெருக்கமான பாலுறவில்தான் உருவாகும் என்பது உங்களுக்கு தெரியாதா?".

நெத்தியடியாக பதில் சொல்லிவிட்டதாக எண்ணியோ என்னவோ இந்த தடவை சிரிப்பை குறுகிய நேர அவகாசத்தில் முடித்துக்கொண்டான்.கலாச்சார பிண்னணியில் வளர்ந்த ஒரு தென்னாசியன் தனது மனைவி இன்னொருவனோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள அனுமதிப்பது அசாதாரணமானது என நான் தொடங்க அதற்கும் பதில் தயாராய் வைத்திருந்தான்.

"அவள் என் மீது அளவில்லா அன்பை வைத்திருக்கிறாள்.உன்னோடு கூடுவதால் அதற்கு எந்த பங்கமும் வந்துவிடாது.குழந்தையை உருவாக்க என்னால் முடியாது.மாறாக அவளால் முடிகிற போது அதற்கேன் தடை போட வேண்டும்?.அவள் மீது கொண்டுள்ள அதீத காதல் இப்படியான முடிவுக்கு காரணமாய் இருந்திருக்கலாம் மலரவன்"

இவனோடு பேசிப்பிரியோசனமில்லை நேரே சந்திக்கலாம் என முடிவெடுத்து காலம்,இடம் குறித்து அழைப்பை அணைத்த பின் மாறன் நினைவுக்குள் வந்தான்.






"டேய்! பெரிய பருப்பு மாதிரி கனக்க கதைச்சுக்கொண்டு இருப்பாய் இவனை பற்றி சொல்லு பார்ப்பம்?"


"மச்சான்! இவன் நடிகர் கூலி இல்லாம நீலப்படம் எடுக்க வெளிக்கிட்டான் போல,இல்லாட்டி நீ மனிசியோட மினக்கெடேக்க அதை வீடியோவா எடுத்து பிளாக்மெயில் பண்ணி காசு பார்க்கிற ஆளாவும் இருக்கலாம்.மனுசியட்ட இருந்து விவாக ரத்து பெற வலுவான வீடியோ ஆதாரம் தேடுகிறவனாகவும் படுகிறான்"

"எப்ப பார்த்தாலும் வீடியோ,பலான படம் பற்றிய சிந்தனை தான், வித்தியாசமா ஏதாவது யோசித்து சொல்லடா"

"உன் மூலமா பிள்ளைய பெற வச்சிட்டு அதை காட்டி மாதம் மாதம் காசு கறக்கிற நீண்டகால திட்டமாகவும் இருக்கலாம்"

"பிறக்கப்போகிற பிள்ளைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதினாப்பிறகுதான் எல்லாமே ஆரம்பிக்கும் என சொல்லியிருக்கிறான்டா"

"இந்த வயசில அப்பா ஆகோணும் எண்டு ஆசை வாறது வழமை தான்.அதுக்காக இவ்வளவு கேவலமா போவாய் எண்டு நினைக்கேலை மச்சான்.அதுக்கு முதல்ல பிள்ள குடுக்கிறதுக்கும் ஒரு தில் வேணும் அது உன்னட்ட இருக்கா என்ன?"

கதையை நிப்பாட்டு வாற சனிக்கிழமை கனறிவோவ் DLR நிலையத்தில அவன் மனிசியோட என்னை சந்திக்க வாறான்.வீட்டுக்கு போய் தடல்புடலான விருந்துக்கு பிறகு வேலைய ஆரம்பிக்கலாம் எண்டு சொல்லி இருக்கிறான்.வீட்டுக்குள்ள போன உடன I.Phone G.P.S அடையாளப்படுத்தியை நிப்பாட்டுறன்.அந்த அப்ளிகேசன் எனக்கு Postcode ஐ e mail லஅனுப்பும்.என்ர இமெயில லொக் இன் பண்ணி அடிக்கடி Refresh பண்ணி பார்.வந்த உடன நீ கமல்ஸோட அந்த வீட்டுவாசலுக்கு கிட்டவா வந்து காருக்குள்ள இரு"

"பிறகு?"

"எனக்கு இந்த விசயம் உண்மையா எண்டு அறியோணும்.இல்லாட்டி தலையே வெடிச்சிடும் போல இருக்கு.பிரச்சினை எண்டா கதவை உடைச்சு உள்ள வா சரியோ?

"அப்ப பிரச்சினை இல்லாட்டி?"

"பேசாம கமல்ஸோட கதைச்சுக்கொண்டு இரு.நான் பிள்ளைய குடுத்துட்டு வாறன்."

மாறன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க மலரவன் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு நடக்கவாரம்பித்தான்.



(பாகம் இரண்டில் முற்றும்)