மூன்றாண்டுகள் தாண்டி விட்டிருந்த போதிலும் அச்சம்பவம் இன்றுவரை மனதைவிட்டு அகலவில்லை.அச்சம்பவத்தைவிட பாரதூரமான சம்பவங்கள் பல எனது வாழ்க்கையில் நடைபெற்றிருந்த போதிலும் அவை ஒவ்வொன்றிற்க்குப்பின்னாலும் ஏதாவது காரணம் இருந்தது.அநேககாரணங்கள் அடித்தது,அடிவாங்கியது,அடிவாங்கினவன் ஆள் வைச்சு திருப்பியடிச்சது,மிரட்டியது,மிரட்டலுக்கு உள்ளானவன் போட்டுக்கொடுத்து உள்ள போனது என்ற வகைக்குள் உள்ளடங்கிவிட்டக்கூடியவை.ஆனால் "அந்த" சம்பவத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பிலான என தேடலுக்கான பதில்கள் பல தளங்களில் கிடக்கின்றன.நீங்கள் வீதியால் போகிறீர்கள் திடீரென்று ஐஞ்சாறு அன்பர்கள் குறுக்கா வந்து தட்டிப்பிழிந்துவிட்டு செல்கிறார்கள்.போகும் போது "மவனே கிக்சாவ இனிமே பார்த்தியெண்டா பின்னிடுவம்" என்று சொல்லிவிட்டும் செல்கிறார்கள்.அடிவிழுந்த வலி ஒருபக்கம் இருந்தாலும் மனக்குழப்பம் பெரிதாக இருக்காது.KICKஷா என்ற மட்ட பிகருக்கு முந்தநாள் போட்ட கடலை பயிராகி இன்று விளைந்திருக்கிறது என்று மனதுக்கு தெரிந்துவிடும்.சேதவிபர அடைப்படையில் அடுத்த முறை கிக்சாவை கண்டால் காததூரம் ஓடுவதா? அல்லது கடலையை இன்னும் ஆழமா போடுவதா? என்று சிந்தித்து முடிவென்றை எடுப்போம்.

ஆனால் முன்னப்பின்ன தெரியாத டம்மி பிகர் ஒன்று திடீரென காவல்த்துறை வாகனத்தில் வந்து "இதோ! இவன் தான் என்னை ரேப் பண்ணினது" என்று போட்டுக்கொடுத்து உங்களை அண்டவெயாரோடு முட்டிக்கு முட்டி தட்ட வைத்தால் எப்படி இருக்கும்?...இதே போலத்தான் அச்சம்பவமும் நிகழ்ந்தது.

அந்த வழக்கை முதலில் அறிக்கையாக சுருக்கித் தருவது இவ்விடத்தில் உசிதமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

குற்றச்சாட்டு-2007 இல் மொறட்டுவைக்கு கல்வி பயில வந்த தமிழ் மாணவி ஒருவரை மிகக்கொடூரமாக உடல் உள நெருக்குதலுக்கு உள்ளாக்கியமை,பின் தொடர்ந்து வந்தமை,தொலைபேசியில் மிரட்டியமை

குற்றவாளிகள்- முதலாம் இலக்க குற்றவாளி,இரண்டாமிலக்க குற்றவாளி

விளைவுகள்- பாதிக்கபட்ட மாணவி ஒருவருடத்தை தவற விட்டு அடுத்த வருடத்தினரோடு சேர்ந்து படிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.அவர் மிகக்கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.பல்கலைக்கழகம் வரவே அஞ்சுமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டபட்டவர் வாதம்-குறிப்பிட்ட பெண்மேல் மட்டத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த பன்னாடை மையலுற்றது மட்டுமே எமக்கு தெரியும்.வேறு எதுவும் இது தொடர்பில் தெரியாது.

மட்ட சகமாணவர் கருத்து-குறிப்பிட்ட பெண்ணுக்கு இவ்வாறான பிரச்ச்சினைகள் ஏற்படுத்தப்பட்டதாக நமக்கு தெரியாது.குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அப்பெண்ணுக்கு எந்தப்பிரச்சினையும் கொடுத்ததாக அறியவில்லை.ஆனால் ஒரு தமிழ்ப்பெண் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதால் அவர் தரப்பில் உண்மை இருக்கலாம்.

பல்கலை வழக்கை விசாரித்த "வணிகதுங்க" தலைமையிலான அரைலூசுக்கும்பலின் கருத்து-பெண் பாதிக்கப்பட்டது உண்மை.இம்மாணவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்படவேண்டியவர்கள்.இவ்வாறான சம்பவத்தில் எதிர்காலத்திலீடுபடுபவர்கள் பயம்கொள்ளும்படி தண்டனை இருக்க வேண்டும்.

காவல்துறை நிலையத்திலும் தாக்கல் செய்யப்பட்ட அதே வழக்கை விசாரித்த தலைமைக்காவல் நிலைய அதிகாரி கருத்து-
"மல்லி! பெம்பிளை வழக்குப்போட்டா முடிவு உங்களுக்கு சாதகமா ஒருகாலமும் வராது.அந்த விசரி இருக்கிற பக்கமே போகாதையுங்கோ!.இனிமேல் கவனமா இருங்கோ!"

தற்போதைய நிலவரம்- பிரச்சினையை தொடங்கி வைத்த மட்டத்தின் பிரதிநிதியானவரும் அப்பெண்ணும் ஜோடியாகி விட்டார்கள்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தால் தண்டிக்கபட்டு,சிங்கள காவல்துறை நிலையங்களாக அலைந்து நொந்து நூடில்ஸ் போல ஆகிப்போனார்கள்.

முழு சம்பவத்தையும் அலசிய உளவியலாளர் கருத்து-
குறிப்பிட்ட பெண்ணுக்கு மாணவர் தலைவரான மங்கோலியன் மேல் ஆர்வம் இருந்திருக்கிறது.அதன் காரணமாக கல்வியை தவற விட்டிருக்கிறார்.அல்லது கண்டிப்பான வீட்டுக்காரருக்கு அஞ்சி மனதில் உண்டான ஈர்ப்பை மறைக்க முயன்று தோற்றிருக்கிறார்.அதன் காரணமாகவும் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல்ப்போயிருக்கலாம்.பெறுபேறுகள் குறையுமிடத்து முதல்தெரிவுகளான பொறியியல் பீடங்களுக்கு போகமுடியாமல் போனால் வீட்டார் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கை இல்லாமல் போக வாய்ப்புண்டு என அஞ்சி பரீட்சையை அடுத்த வருடம் எதிர்கொள்வதற்காக காரணங்கள் தேடியிருக்கிறார்.அத்தருணத்தில் மங்கோலியனோடு கூடவே சத்தமாக சிரித்தபடி திரிந்த குற்றம்சாட்டப்பட்டவர்களான இருவரும் மனதில் வர காரணங்களாக்கியிருக்கிறார்.அக்காரணக்களுக்கு கொழும்பு மாணவிகளான வீணை வாசிப்பவரும் இன்னும் சிலரும் உரமேற்ற இறுதியாக அதை வழக்காக்கி இருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர் வாதம்-
பொய்வழக்கு போட்டதைக்கூட மன்னித்து விடலாம் ஆனால் "பிரச்சினைக்குரிய யாழ்ப்பாண மாணவர்கள்" என போட்டுக்கொடுத்து மிகச்சிக்கலான காலகட்டத்தில் உயிராபத்தை ஏற்படுத்த முயன்றதை மட்டும் மன்னிக்கவே முடியாது.தமிழனான அக்குறிப்பிட்ட பெண்ணின் தந்தை இப்படி காவல்துறைநிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டை சிங்களவரான நிலையபொறுப்பதிகாரி கோடிட்டுக்காட்டி "நான் என்றபடியால் தப்பித்தீர்கள்,வேறு எவராவது என்றால் அவ்வளவுதான்" என்று சொன்னதையும் மறக்க முடியாது.சரிபிழைகளுக்கு அப்பால்ப்பட்டு இவ்வகையான அசிங்கமனோபாவத்தின் மூலப்புள்ளி எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டு போகும் போது தெரியும் முடிவிடம் எப்பவும் போல அருவருப்பாகவே காட்சியளிக்கிறது.

{வழக்கு வளரும்}





மிலாமிளிக்கா!.மிதப்புக்காலணிகள் மீது மிருதுவான பாதம் வைத்து புரவி நடை போடும் ஐந்தடி உடம்புக்காரி.உயரம் மட்டும் மட்டுப்பட்டதே தவிர, கட்டுமீறிய அளவுகளாய் மீதம் எல்லாம் வாய்த்திருந்தன.முதல்சந்திப்பிலேயே காதல் சொன்ன காளைகளை எல்லாம் முரட்டுப்பார்வையாலேயே விரட்டிய அவளுக்கு அவன் வந்து முன்னால் நின்றபோது மூச்சே வரவில்லை.அவள் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்த உதடுகளால் அவன் அழகாய் புன்னகைத்த போது பைத்தியமாகிப்போனாள்.கலாச்சாரம் கட்டுப்பாடு எல்லாம் மறந்து,உணர்ச்சி நிரம்பிய கணமொன்றில் சனநெருக்கடியான வீதியோரமாய் அவனோடு ஆழமாய் உதட்டு முத்தம் பரிமாறிக்கொண்டதை ஊரே பரபரப்பாய் கதைத்தது.விடயம் அறிந்தவர்கள் அவளை காணும் தருணங்களில் வீசும் விசித்திரப்பார்வைகள் அம்முத்தத்தை மீளவும் நினைவுக்குள் கொண்டுவந்து கிளர்ச்சியூட்டினவே தவிர அவமானத்தை தருபவையாக இருக்கவில்லை.அவள் அங்குலம் அங்குலமாய் உணர்வு ஊற்றி வளர்த்த காதல்ச்செடிக்கு ஒரு ஆண்டு வயது ஆகிய தருணங்களில்த்தான் அந்த அரிதான,உவப்பான வாய்ப்பு தேடி வந்தது.சிறுவயதிலிருந்து அவளின் கனவுகளினிருப்பிடமாகி இருக்கும் லண்டன்,சொகுசுக்காரில் வந்து இறங்கும் கணவனின் கோட்டுப்பைகளிலிருக்கும் பணத்தின் கனதி,நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் வாழ்க்கை என கண் முன்னே நின்ற பிம்பங்களை சுருக்குப்பையில் போட்டுகட்டி உளத்தாரசின் ஒரு தட்டில் போட்டுவிட்டு மறுதட்டில் அவன் காதலை போட்டபோது ஈடாகவில்லை."என்னை மன்னிச்சிடுடா!, தற்கொலை செய்வம் எண்டு மிரட்டுற வீட்டுக்காரருக்கு முன்னால என்னால எதுவுமே செய்ய முடியேலை,உனக்கு என்னை விட நல்ல ஒருத்தி கிடைப்பா" என்று சில கண்ணீர்த்துளிகளை இலவச இணைப்பாக்கிச்சொல்லி முடித்து நிமிர்ந்த போது அவன் பலவீனமான நடையோடு போய்க்கொண்டிருந்தான்.



நாட்களின் ஓட்டத்தில் பழைய நினைவுகள் மழுங்கிப்போயிருந்தன.தொலைபேசியில் புதியகாதலை எதிர்கால வெளிநாட்டு கணவனோடு வளர்ப்பதொண்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. குறிக்கப்பட்ட மணநாள் நெருங்க பரபரப்பாகி அழகு சிகிச்சை நிலையங்களுக்கு ஓடிக்கொண்டிருந்தபோது தான் அந்த கொடூரமான ஒற்றைத்தலைவலி அவளைத்தாக்கியது.சகல மாத்திரை மருந்துகளுக்கும் அடங்காமல் கபாலத்தில் தொடர் சம்மட்டி அடிகளாய் பிறந்த வேதனையின் வீச்சம் தாங்க முடியாமல் இறுதியாய் டொக்டர் மலரவனிடம் வந்தாள்.மிளாமிளிக்காவை மல்லாக்க வைத்து ரொமோகிறபி ஸ்கானருள் செலுத்தி முப்பரிமாண படங்களை எடுத்துப்பார்த்த போது கபாலத்தின் வலது பக்கமாக மேலே கருப்பாக புள்ளியாய் எதோ ஒன்று தெரிந்தது.அசாதாரண வளர்ச்சி கொண்ட கலங்களால் உருவாகும் விம்பத்திலும் பார்க்க அது வேறுபட்டிருந்தது.ஆழ அலசி கூர்ந்து பார்க்க அப்புள்ளியூடு சென்ற எக்ஸ் கதிர்கள் எவையும் தெறித்து வரவேயில்லை என்பது விளங்கிற்று.சக்திக்கதிர்களை உறிஞ்சி தெறிக்கவிடாமல் வைத்திருக்கும் புள்ளி என்றால்......... மனித உடல்க்கலங்களுக்கு அப்படியான ஒரு இயல்பு இருப்பதேயில்லையே?....விலகலை உண்டாக்கும் கதிரியக்க உலோகங்கள் கூட எக்ஸ் கதிர்களை முழுமையாக சிறைப்பிடிப்பதில்லை......சாத்தியமான தகவுகளூடு பாய்ந்த எண்ணஓட்டம் ஒரு புள்ளியின் தரித்து நின்ற போது மலரவன் முகத்தின் வியர்வைத்துளிகள் ஏசி குளிர்மையையும் மீறி பூத்திருந்தன.



காஸ்மிக் கருந்துளைகள் பிரபஞ்சத்தின் பிரமாண்ட மர்மப்புள்ளிகள்.அளவிடமுடியா திணிவையும் மிகக்குறுகிய கன அளவையும் கொண்ட அவை அளவில்லா ஈர்ப்பு விசையால் ஒளியையும் தப்பவிடாமல் சிறைப்பிடிக்கும் வல்லமையுள்ளவை. சூழவுள்ள திணிவுகளை விழுங்கி விரிந்து செல்லும் இவற்றுள் திணிவழியும் வீதம் உள்ளிழுப்பதை விட அதிகமாயிருக்கும் என்பதால் வளர்ச்சி எக்காலத்திலும் கட்டுப்படாதென பௌதீக ஆசிரியர் அக்காலத்தில் சொன்னது நினைவில் வந்தது.இவற்றுக்கு மாறாக மிகச்சிறிய அளவிலான கருந்துளைகளும் உள்ளன.திணிவில் 5000 புரோட்டன்களுக்கு சமனானானதும் அளவில் புரோட்டனை விட 1000 மடங்கு சிறியதுமான திணிவு கருந்துளையாக தொழில்படுமென நவீன விஞ்ஞானம் சொல்கிறது.உடலியல் கூறுகளிலொன்று பிரிகையடைந்து மிகமிக சிறியதாகும் பட்சத்தில் அது பிறகலங்களை விழுங்கும் துளையாக மாறி வளர்ந்து கொண்டே செல்வதற்கான வாய்ப்பு பில்லியனில் ஒன்றேனும் இருப்பதாக மனம் சொல்லியது.




"செல்வி மிளாமிளிக்கா! உங்களுக்கு வந்திருப்பது பிரபஞ்ச மூலைமுடுக்குகளிலும் இல்லாத அரிதான நோய் ஒன்று.கபாலத்துள் இருந்த கல அணுக்களில் ஒன்று படுவேகமாக பிரிகையடைந்து கருந்துளையை உருவாக்கி இருக்கிறது.அது சூழவுள்ள கலங்களை விழுங்கி வளர்ச்சியடைந்து வருகிறது.கால ஓட்டத்தில் அது உம்மை மட்டுமல்ல உலகத்தையே விழுங்கவல்லதாகவும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.மலரவன் சொல்லிக்கொண்டு போன வார்த்தைகள் பிம்பங்களாக அணிவகுக்க, மிளாமிளிக்கா மிரளத்தொடங்கினாள்.




"நிறைகுறைதல்,கலச்சிதைவுக்கு காரணமான HCG ஓமோனின் ஒரு வடிவமே இச்சிக்கலுக்கு மூலமாக இருக்கும் என நினைக்கிறேன்.மனதை விட்டு நீக்க முடியாமல் இருக்கும் துன்பியல் நினைவு ஏதாவது நீண்ட நாளாய் இருக்கிறதா செல்வி மிளாமிளிக்கா?"

"அப்படி ஒன்றுமே இல்லை டொக்டர்"

"குற்ற உணர்வு?,யாருக்காவது தீங்கு அல்லது துரோகம் இழைத்ததாய் உணர்வு?,அதுவும் HCG சுரப்பை தூண்டும்"

"ம்ம்ம்.இல்லை.ஆனா கொஞ்சமா.அதை சரியாக்கேலும் எண்டு நினைக்கிறன்"

"முதல்ல அதை செய்யுங்கோ,கடவுள் உங்கள் பக்கம் நிற்பாராகட்டும்.
முக்கியமாக இதைப்பற்றி எவருக்கும் சொல்லி விடாதீர்கள்.உங்களால் தமக்கு ஆபத்து என நினைப்பவர்கள் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்."



சில மாதங்களின் பின்பு குளிர்மையான மழை நாள் ஒன்றில் மலரவனை சந்திக்க யாரோ பூங்கொத்துக்களோடு காத்திருப்பதாய் உதவியாளர்கள் சொல்லிப்போனார்கள்.சென்று பார்த்த போது மலர்ந்த முகத்தோடு அவன் நின்றிருந்தான்."டொக்டர்,அவ சம்மதம் சொல்லிட்டா,வாற மாதம் கலியாணம்.நீங்க அவசியம் வந்தாகணும்,நான் இப்ப ட்ரக்ஸ் எல்லாம் விட்டு வேளா வேளைக்கு சாப்பிட்டு எப்பிடி மாறிட்டன் பாருங்கோ" வார்த்தைகளில் குழந்தையின் குதூகலம் தெரிந்தது.

அன்றிரவு மலரவன் வழமை போல ஆழமான சிந்தனைக்குள் தன்னை அமிழ்த்திக்கொண்டிருந்தார்.அவரால் நிச்சயம் அவன் திருமணத்தில் பங்கேற்க முடியாது.அது விரும்பத்தகா விளைவுகளை ஏற்படுத்தலாம்.அநேகமாக மிளாமிளிக்கா கழுத்தில் அணிந்திருக்கும் கனமான ஆபரணம் திருமணம் முடிந்த பின் பெட்டிக்குள் உறங்கச்சென்றதும் அந்த ஒற்றைத்தலைவலி அகன்றுவிடும். உதவி தேடி வந்தவளுக்கு புனைகதை சொல்லி குழப்பியது கிஞ்சித்தும் வருத்தத்தை தரவில்லை.காதல் துரோகத்தாலுண்டான வலிகள் நிரம்பிய பாதை வழி வந்தவன் அவ்வலி இன்னொருவனுக்கு கிடைப்பதை ஒருபோதும் விரும்பமாட்டான்.