பிரித்தானியா போய் படிச்சு அறிவ பெருசா வளர்க்காட்டியும் பிழை கண்டுபிடிக்கிற திறமைய மலையளவாக்கினதில சின்னதா எப்பவும் ஒரு சந்தோசம்.முந்தி தமிழர் கலாச்சாரம் எண்டா இன்றளவுக்கும் பொரிபடாமல் காலம் காலமா அடைகாக்கப்படுகிற விலைமதிப்பில்லா ஆனையளவு முட்டையாக்கும் என்று இருந்த எண்ணம் போய் அது கிப்ஸ் சாறம் போல மலிவான ஒன்று தான் எனவெண்ணும் படி ஆகிவிட்டேன்.உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை காலனியாதிக்கம் தந்த சுவடுகளை சுமந்தபடி "வெள்ளைக்காரர் சரியான குப்பையன்களாம்,நெறியில்லாதவங்களாம் உண்மையோடா தம்பி?" என கேள்வி கேட்கும் ஆன்ரிமாரை நினைக்க அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.பிரத்தியோக அடையாளங்கள் என்ன?,அன்னிய வழக்கங்கள் என்னவென்றே தெரியாமல் வாழும் அளவுக்கு வரம்புகள் பலவீனமான இனமா எங்களுடையது என எண்ணும் போது விரக்தியும் வெறுப்பும் மேலிடுவதை தடுக்க முடியவில்லை.

சனம் முழுதையும் நடுரோட்டில் நிக்கவைச்சு சத்தமாக ஒலிபெருக்கி பூட்டி...
"சப்பாத்து போட்டு ரை கட்டின தமிழ் கலாச்சார ஐயாமாரே,பாவாடை சட்டை போட்ட கலாச்சார அம்மாமாரே!,பஞ்சாபி கட்டிய இளம் பிகருகளே,டெனிம் போட்ட காளைகளே! காலமை எழும்பி ரீ குடிச்சு,வேர்க்குக்கு போய் டயர்ட் ஆகி வீடு வந்து ரைஸ் சாப்பிட்டு உடம்பு வளர்க்கும் மறவர்களே!,நீங்கள் போடுகிற பிராவும் யட்டியும் கூட சோழர்காலத்தில் இருந்து போட்டு வந்தவை தானா?,மனமுவந்து கேக் வெட்டி மகிழ்கின்ற பிறந்த நாளும்,மோதிரம் மாற்றி செய்கிற ரெஜிஸ்ரேசனும் சங்ககாலம் தொட்டு இருப்பவை தானா?
வெள்ளைக்காரன் நூற்றாண்டுகளுக்கு முன் போட்ட பாடவிதானத்தை அடியொற்றி கல்வி கற்று,அவன் போட்ட தண்டவாளத்திலும் றோட்டிலும் இன்றளவும் ஓட்டிக்கொண்டிருக்கிற உங்களுக்கு என்னடா நாகரீகம்?,அவனைப்போல வாழவேண்டும்,அவன் மொழி பேச வேண்டும் என்று நடை,உடை,பாவனை என ஒன்று விடாமல் பிரதியெடுக்கிற நீங்கள் காமத்துக்கு மட்டும் உருமறைப்பு போட்டால் அது தனிக்காலாச்சாரம் ஆகிவிடுமா?.பெண்பிள்ளை வயசுக்கு வந்ததை ஊர்முழுக்க சொல்ல விழா எடுப்பது,தனிமனித அந்தஸ்த்து,உழைப்பு என்பனவற்றை அடிப்படையாக கொண்டு பணப்பெறுமதியில் திருமணங்களை நிர்ணயிப்பது போண்ற கேலவங்களைக்காட்டிலும் அவங்களின்ர டேட்டிங்கும் கோயிங் அவுட்டும் எவ்வளவோ மேலானதடா.முன்னால் வீற்றீருக்கும் காலாச்சார இளைஞர் இளைஞிகளே! நீங்கள் வாழ்க்கைத்துணை தேடும் போடும் முக்கியமாக அவதானிப்பது வெள்ளையா கருப்பா? என்ற வெள்ளைக்காரன் விதைத்துவிட்ட பேதத்தைத்தானே?....

என்று கிழி கிழி என்று இயலுமானவை கிழித்து எறியவேண்டும் என்று சமீப நாளாய் எனக்குள் ஒரு ஆசை ஓடிக்கொண்டு இருக்கிறது.ஆனால் சொல்லி முடிக்க என்னை விடமாட்டார்கள் என்பதுவும்,முடிக்க விட்டாலும் விசரன் என்று குறித்துவிடுவார்கள் என்பதும் நன்றே தெரிந்ததால் என்னவாவுக்கு கடிவாளம் போடும்படியாயிற்று.

வெறும் பேச்சுக்களுக்கு அப்பால்ப்பட்டு யதார்தமாக சிந்திக்குமிடத்து ஐநூறு ஆண்டுகளாக பீடித்திருந்த காலனியாதிக்கம் நம்மையறியாமலே எமக்குள் ஊடுருவி கலாச்சாரம் என்ற விடயத்தை ஒரு காமெடி பீஸ் போல ஆக்கிசென்றுவிட்டது என்பது புலப்படும்.ஆனால் அவ்வாதிக்கம் இன்று விடுபட்ட போதிலும் ரத்தத்தில் ஊறிப்போன செருப்புப்புத்தி காரணமாக வலிந்து அதற்க்குள் எம்மை திணித்துக்கொண்டிருப்பதுதான் சோகமான விடயம்.சரி கலாச்சாரம் தான் கிழிந்த சாறம் போலாகிவிட்டது.மிகப்பழைமையான ஒப்பில்லாத செம்மொழியாம் தமிழ் செம்மையாக மொழியை பேணினாலே போதுமே.இனத்துக்குரிய தனித்துவ அடையாளம் வந்துவிடப்போகிறது.ஆனால் இதற்க்குக்கூட மரத்தமிழன் தயாராக இல்லை என்பது துக்ககரமான உண்மையாகும்.



ஒரே மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் அறிமுகமாகும் போது பொது மொழியில் பேசிக்கொண்டாலும் பின்னர் சொந்த மொழியில் பேசுவதையே விரும்புவார்கள்.பாழாய்ப்போன பண்டித்தமிழன் மட்டும் தமிழன் என்று தெரிந்து அறிமுகமானாலும் ஆங்கிலத்தை குறுக்கே ஓட்டி விடுவான்.கட்டிப்போட்டு சுட்டாலும் ஆங்கிலம் ஒரு அறிவு அல்ல மொழி என்பது உறைக்காது.பொதுவாக உரையாடலில் ஒருவர் மேலோங்க விரும்பும் சந்தர்ப்பத்தில் தலையங்கம் சார்பாக ஆழமான கருத்துக்களை முன்வைப்பார்கள்.ஆனால் மரத்தமிழன் மட்டும் ஆங்கிலதில் பிறர்க்கு புரியாமல்ப்பேசி ஆதிக்கம் நிலைநாட்ட முயல்வான்.இந்த இயல்பு பலரால் பலவாறு விமர்சிக்கப்பட்டாலும் இது ஒரு வகையான தாழ்வுமனப்பிரச்சினையே ஆகும் என பெரியபிரித்தானிய சம்பவங்கள் சிலவற்றை வைத்து முடிவெடுக்கும் படியானது.

லண்டன் மாநகரில் 40+ வயதுகளை தாண்டிய அநேக மரத்தமிழர் 20 வருடங்களுக்குட்பட்ட காலப்பகுதியில் வந்தவர்கள்.படித்த,படிக்காதவர் என்ற வரையறைகளை தாண்டி இவர்களால் சரளமாக பிரித்தானிய உச்சரிப்புடன் ஆங்கிலம் பேச பெரும்பாலும் முடிவதில்லை.இவ்வாறான பேர்வழிகள் ஊரிலிருந்து புதிதாக வந்தா யாராவது சிக்கினால் தங்கள் புலமையை காட்டாமல் விட மாட்டார்கள்.சிக்கினவன் புரியாம முழுசினா "மிஞ்சிவிட்டாயடா இவனை" எண்டு தங்களைத்தாமே பாராட்டி விட்டு அமைதியாகி விடுவார்கள்.மாறாக அவன் நம்ம கேதார் போல எழும்பி நிண்டு வெளுத்து வாங்கினா சரண்டராகி விடுவார்கள்.ஆனால் ஆயுளுக்கும் கடுப்பை உள்ளே தேக்கி வைத்திருப்பார்கள்.
இன்னொரு சாரார் புலம்பெயர் டமிலரின் லண்டன் வாரிசுகள்.இவர்கள் சிறிய வயதில் குடிபெயர்ந்தவர்கள்/ லண்டனில் பிறந்தவர்கள் என வகைப்படுவார்கள்.இங்கும் குறித்த வீதத்தினர் செருப்புப்புத்தி மிகு பெற்றார்காரணமாக டமிலர்களாகி விடுகின்றனர்.ஏனையோர் பிறமொழிபேசுபர்களோடு பிரித்தானிய உச்சரிப்போடு ஆங்கிலத்தை பேசும் அதே வேளை என்போண்ற தமிழர்களோடு கலப்படமின்றி தமிழை பேசுவதை அநேக இடங்களில் அவதானித்து இருக்கிறேன்.அவர்களால் ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டுமே பார்க்க முடிவதால் அவ்வாறு பேச முடிகிறது.மாறாக செருப்பு சிந்தனைச்சூழலில் வளர்ந்தவர்கள் ஆங்கிலத்தை அறிவாக நினைப்பதை தவிர்க்க முடியவில்லை.எப்படியோ ஆங்கிலம் சர்வதேச மொழியாகி தவிர்க்கமுடியாததாகி விட்டது.தமிழனோ,அரைத்தமிழனோ அவன் விரும்புகிற மொழியில் உரையாடலை தொடரவே நான் விரும்புகிறேன்.எந்த ஒரு புள்ளியிலாவது ஆங்கில மொழியை தனது அறிவாக காட்டும் கருவியாக பயன்படுத்துகிறான் என அடையாளப்படுத்துகிறேனோ...அவ்விடத்திலேயே உரையாடலை தாய்மொழிக்கு மாற்றிவிடுகிறேன்.பலரும் விரும்புவது போல ஆங்கிலத்தில் பதிலளித்து மதிப்பை தக்கவைக்கும் செருப்புச்சிந்தனைக்குள் நான் போவதில்லை.

ஆயிரம் மொழிவேண்டும் என்றாலும் பேசலாம்.ஒரு மொழியை இன்னொரு மொழியோடு கலந்து பேசக்கூடாது.அதைவிடக்கேவலம் ஒன்றுமில்லை.இலங்கைக்கு வந்தது தொடக்கம் இந்தக்கலப்பட உரையாடல்களில் கொடூரத்தை மீள் உணரத்தொடங்கி இருக்கிறேன்.வானொலி,தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்கள் தமிழன்னை மீது பாலியல் வன்முறை நித்தம் புரிந்தபடி இருக்கிறார்கள்.சில காலம்முன் இருந்ததை விட கலப்பட வீதம் கூடியிருப்பது தெளிவாக தெரிகிறது.ஐந்தாமாண்டு படிக்கிற சிறுவன் கரங்கள் வரை போய் சேர்ந்திருக்கிற கைத்தொலை பேசிகளும்,கணனிகளும் ஆங்கில அறிவை வளர்த்ததை விட அறியப்படும் ஆங்கிலச்சொற்களின் எண்ணிக்கையைக்கூட்டி கலப்பட வீதத்தை அதிகரித்து இருக்கின்றன.

"ஹேய் மச்சான்!,எப்ப வந்த?,ஸ்ரடீஸ் எல்லாம் முட்ன்சுதா?,இனி அப்றோட் போற பிளான் இல்யா?,சிரிலங்கா எப்டி? சிராவாயிருக்கா?"

டேய்! இன்னொரு தடவை யாராவது வந்து இப்படி கதைச்சா,நான் அழுதுடுவன்டா!

வேண்டாம்,விட்டுடுங்கோ!,நான் கச்ச தீவுப்பக்கமா போய் குடியேறப்போறன்.

உங்களுக்கு கடைசி மட்டும் விளங்காது, ஆனா எனக்கு தெரியும்!

தேம்ஸ்ல குளிச்சாலும் காக்கை "ஸ்வான்" ஆகாது.





கிபி 3020 ஆம் ஆண்டு.பல்கிப்பெருகிய சனத்தொகை உச்சத்தைத்தொட்டு தனிநபர் நடமாட்டம் மட்டுப்படும் அளவுக்கு நிலவரம் மோசமாகிக்கொண்டிருந்தது.பிரத்தியோக வதிவிடங்கள்,வாகனங்கள் வைத்திருப்பது தடை செய்யப்பட்டு ஆளுயர கப்சியூல்களில் வாழ்வதற்க்கு மக்கள் பழக்கப்பட்டிருந்தார்கள்.அங்கு தரப்படும் மில்லிக்கிராம் அளவேயான குளிகைகள் தினசரி வாழ்க்கைக்கு தேவையான கலோரிகளை தருமாற்றல் பொருந்தியவையாயிருந்தன.பயணம் செய்யும் தேவை மட்டுப்படுத்தப்பட்டு தவிர்க்கமுடியாத பட்சத்தில் மட்டும் சக்தியூட்டப்பட்ட மனிதர்கள் தேவையான இடங்களுக்கு நகர்த்தப்பட்டார்கள்.பிள்ளைகளை பெறுவதற்கு அனுமதி பெற அரசாங்கத்திடம் விண்ணப்பித்துவிட்டு நீண்டகாலம் காத்திருக்கவேண்டிய நிலமை நீடித்திருந்தது.மீறியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள்.சமீப ஆண்டுகளாக அதிகரித்துவந்த சக்திக்கான தட்டுப்பாடு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் ஒன்றிலிருந்து கிடைக்கப்பெறும் தாது மூலமாக தணிந்திருந்தாலும் அது நிரந்தரமானதல்ல என எதிர்வு கூறப்பட்டது.உயிர் நிலவுகைக்கு ஒவ்வாததாக மாறிவிட்டிருந்த சூழலில் நீடித்து மனித இனம் தப்பிப்பிழைத்திருப்பதற்குரிய சூழலை நிலைப்படுத்தும் விதமாக இயங்கிக்கொண்டிருக்கும் இராட்சத இயந்திரங்கள் ஒவ்வொண்றுக்கும் மிக அதிகளவு சக்தி தேவைப்பட்டதாலும்,புதிய சக்திமுதல்களை தேடி விண்வெளியில் அலையும் பன்னாட்டு நிறுவனங்களும் எதிர்காலத்தில் கிடைக்கப்பெறக்கூடிய கனிமங்கள் தொடர்பில் அவநம்பிக்கையான அறிக்கைகளை வெளியிட்டதை தொடர்ந்தும் அவசரநிலை அநேக நாடுகளில் பிரகடனப்படுத்தப்பட்டது.



சந்திரனின் ஆழமான உலர்மலைக்குகை ஒன்றுள் அமைந்திருந்த பிரமாண்டமான ஆய்வுக்கூடம் மலரவன் தலைமையில் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருந்தது.மக்கட்தொகையை குறைப்பதற்காக சர்வதேச தலைமையின் உத்தரவுக்கமைய செயற்படுத்தப்படும் இரகசியதிட்டம் ஒன்றுக்காக அனைவரும் உழைத்துக்கொண்டிருந்தார்கள்.சக்திபற்றாக்குறை ஏற்பட்டு மனித இனம் முழுமையாக அழிவதிலும் பார்க்க சனத்தொகையை குறைத்து உயிர்நிலவுகையை மேலும் சில ஆண்டுகளுக்கு உறுதிப்படுத்துவதே சரியானது என முடிவெடுத்து தலைமைப்பொறுப்பை ஏற்க மலரவன் நீண்ட மனப்போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியிருந்தது.இக்குறைப்பு உலகின் சகல இனங்களினதும் தற்போதைய எண்ணிக்கை வீதத்துக்கு ஏற்ப பகிரப்பட்டு பின்னர் ஒவ்வொரு இனங்களுள்ளும் பலவீனமான எச்சங்களை தோற்றுவித்த நபர்கள் குறிவைக்கப்பட்டார்கள்.சகலதும் முடிந்து,பூமியை நோக்கி பலநூறு ஒளியாண்டு வேகத்தில் பாய்ந்த கலம் தரையிறங்கியபோது காலம் 2011 எனக்காட்டியது.



யாழ்ப்பாணம் ராஜவீதி நடுவில் பேரோசையுடன் 1/05/2011 ,11.15AM அளவில் மோதிய ஒளிப்பிளம்பைக்கண்டு மக்கள் பயந்து போயிருந்தார்கள்.பனையுரத்துக்கு எழுந்திருந்த தூசிப்படலம் அகன்ற பொழுதுகளில் மக்கள் வீட்டுப்படலைகளூடு நோட்டம் விட்ட போது தென்பட்ட உடலளவுக்கு ஒவ்வாத அசாதாரண தலையளவு கொண்ட மனிதன் அவர்கள் கவனத்தை ஈர்த்திருக்கவேண்டும்.அம்மனிதனின் மெலிந்த குறுகிய பலவீனமான தோற்றம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாத அவர்கள் அவனின் பிரகாசமான வெளிர் நிறம் குறித்து வியப்பாக தமக்கிடையில் பேசிக்கொண்டார்கள்.நீண்டு வளைந்த வீதியில் வேகமாக சென்ற அவன் முடக்கு ஒன்றில் தரித்து நின்ற போது எதிரே இருந்த வேலிப்பொட்டை அளவு எடுத்தபடியிருந்த கமலரூபன் எதிர்ப்பட்டான்.

"உனது பெயர் என்ன?"
"எனது நாம இஸ் கமலரூபன்"
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"யாப்பனே அண்ட் தமிழ்ப்பெண்கள் என்ற கெடிங்கில் ஆராட்சிக்கட்டுரை லியனவா"
"தமிழ்ப்பெண்களுக்கும் வேலிப்பொட்டுக்கும் என்ன சம்பந்தம்?"
"பெஸ்ற்,ஒயா யார் எண்டத ரெல்,தென் கேள்வி கியூவா"

அம்மனிதன் மணிக்கட்டை முகமருகே கொண்டு போக ஆயிரம் ஆண்டுகளை தாண்டிப்போன சமிக்கைகள் மலரவனின் ஆய்வுகூட திரையை உயிர்ப்பித்தன.

"மலரவன்! நான் காலவோடி T1000M1"
"T1000M1! இலக்கு இலக்கம் 1 அருகில் இருந்தும் ஏன் தாமதம்?"
"இலக்கு 99.99% ஒத்துப்போகிறது.ஆனால் தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளில் பேசுவது மட்டும் தரவுக்கு முரணாக உள்ளது"
"இலக்கு உறுதிப்படுத்தப்படுகிறது"

மலரவன் அழைப்பை துண்டித்த சில நொடிகளில் மக்கள்தொகை 20589113210000 ஆல் குறைக்கப்பட்டதாக அளவீடுகள் காட்டின.வீதியில் மயங்கி விழுந்திருந்த கமலரூபனை ஊர்ச்சனங்கள் தண்ணீர் தெளித்து எழும்ப வைத்தார்கள்.

"தம்பி! அந்த வடிவான வெள்ளைப்பெடியன் உம்மோட கன நேரமா கதைச்சுக்கொண்டு நிண்டவர்,எதும் சொன்னவரே?"

கதைபுடுங்கிய பெரிசுகளைப்பார்க்க எரிச்சலாய் வந்தது.பேசிக்கொண்டிருக்கும் போது அவன் கையில் வைத்திருந்த விசித்திர ஆயுதம் ஒன்றின் மூலம் அந்தரங்க பகுதியை நோக்கி ஒளிவெள்ளமாய் சுட்டது மங்கலாய் நினைவில் வந்தது.சூழ்ந்திருந்த சனத்தை நாலைந்து கெட்ட வார்த்தைகளால் விரட்டிவிட்டு அரியாலை நோக்கி தள்ளாடி நடக்கத்தொடங்கினான். தனக்கு பிறக்கப்போகிற 5 பிள்ளைகளும் இல்லாமல் செய்யப்பட்டது பற்றியோ,1000 வருடங்களின் பின் இருக்கவேண்டிய 20589113210000 சந்ததி அழிக்கப்படது பற்றியோ எதுவும் அறிந்திராதவனாக.

(வளரும்)