காதல்க்கிறுக்கன் நுண்ணிய புலன்களைக்கொண்டவன்.வெளுத்தெல்லாம் பாலென்று நம்பும் சாதாரண தமிழன் போலவில்லாது "மச்சான் இவன் ஒரு மார்க்கமனான ஆள், கவனமா இருக்கோணும்" என்று அடிக்கடி மங்கோ தொடர்பாக கருத்து தெரிவிப்பவன்.நாயகன் முரட்டு துணிச்சல்காரன்.இரண்டுபேருள்ளும் எனது மனதில் உருவான சந்தேகம் ஏற்கனவே முளைவிட்டிருந்ததால் கணநேரத்தில் நடுஇரவை அண்மித்த பொழுதுகளின் காரிருளை போர்வையாக்கி மங்கோ அறையுள் நடப்பவற்றை அவதானிக்கக்கூடிய சமீபத்தில் நிலையெடுத்துவிட்டிருந்தார்கள்.உள்ளே போன உரையாடல்களை செவிமடுத்த இருவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.

பின்னிரவில் அறைக்கு திரும்பிய மங்கோவின் அறையில் வதியும் சீனியர் ஒருவருக்கு நடந்த சம்பவம்,அதற்கான காரணம் என்பன திரிபில்லாமல் மெலிந்த குரலில் சொல்லப்பட்டாலும் இரவின் நிசப்தம் சுவர்களை தாண்டி வெளியே இருந்த காதல்கிறுக்கன் பாம்பு காது வரையும் அவற்றி எடுத்து வந்துவிட்டிருந்தது.அடித்தவர்கள் சும்மா அடிக்கவில்லை "எங்களோட தங்கச்சியோட சொறிவியா?, சொறிவியா?" என்று கேட்டு கேட்டுத்தான் மொங்கி இருக்கிறார்கள்.அதை வெளியில் சொன்னால் கேவலமாகிவிடும் என்று நினைத்த மங்கோ பாமன் கடைப்பன்னியின் ஆட்கள் சுகந்தமாறனை தேடிவந்த இடத்தில் தனக்கு அடித்து விட்டதாக கதை ஒன்றை வெகுநேர்த்தியாக பின்னியிருக்கிறார் என்பதை ஊகித்துக்கொள்ள புலனாய்வு அறிவொன்றும் தேவையில்லைதானே?.அது இளம்செழியனாலேயே முடியக்கூடியது.


நமது உள்வீட்டு விவகாரம் கொழும்பு அரைடமில்சுக்கு தெரிந்தால் கேவலமாகிவிடும் என முடிவெடுத்த நாம் சாத்வீக வழியில் மங்கோவிடம் விளக்கம் கேட்க முடிவெடுத்தோம்.காதல்கிறுக்கனும், குடிகாரனும் மறுநாள் விரிவுரை முடிந்து வந்த பொழுதுகளில் விடயத்தை மெதுவாக போட மங்கோ முதலில் தடுமாறி பின்னர் வன்சொற்களால் தாக்கத்தொடங்கிவிட்டார்.சிலநாட்களின் பின்னர் மங்கோவிடம் நேரடியாகவே பேசிவிடுவது என்று முடிவெடுத்தேன்.எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவனாக கருதிக்கொண்டிருந்தவனிடம் எப்படி இதைக்கேட்பது என்பது தொடர்பில் எனக்குள் மிகுந்த தயக்கம் இருந்ததால் சில நாள் தாமதமாயிற்று.

"உனக்கு என்ன விசரா?,உன்னால தான் நான் அடிவாங்கினான்,ஏன் இப்பிடி கதைய மாத்துறாய்?" என்று சொன்னவனிடம் இறுதியாக கேட்டேன்.
"எங்களோட தங்கச்சியோட சேட்டை விடாதே" எண்டு அடிச்சவங்கள் சிங்களத்தில் கேட்டதாக நீ "பிர----" என்கிற சீனியரிடம் செல்லவில்லையா?"

"இல்லை.அப்படி சொல்லேலை" மங்கோ அழுத்தமாக சாதித்தான்.கழுத்தறுப்பு,நம்பிக்கைத்துரோகம்,நயவஞ்சகம்,ஆப்படிப்பு,குழிபறிப்பு எனபனவற்றின் ஒட்டுமொத்த வடிவமாக மங்கோ தெரிந்தான்.மங்கோ ஒரு வெள்ளிதவறாமல் கோயிலுக்கு செல்வான்.தினமும் கடவுளை வழிபடுவான்.துளிகூட கடவுள் நம்பிக்கையில்லாத நான் கூட அவனின் நம்பிக்கை தூய்மையானது என மதிப்பளித்திருந்தேன்."ஓவரா சாமி கும்பிட கோயிலுக்கு போறவனை ஒரு காலமும் நம்பக்கூடாது" என அலியப்பா சொன்னது சரியென்று பட்டது.அத்தோடு அவனோடு பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டேன்.

பின்னாளில் தொற்றிக்கொண்ட குறும்படங்களை உருவாக்கும் ஆர்வம் காரணமாக கமெராவுடன் 7ஜி குழுமத்தோடு அலைந்ததில் ஏறக்குறைய இந்த விடயம் முற்றாகவே மனதைவிட்டு அகன்று போயிருந்தது.இறுதி வருடம் முதலாவது செமிஸ்டர் லீவுக்கு நுவரெலியாக்காடுகளுக்குள் சூட்டிங் என்று அலைந்துவிட்டு இறுதி செமிஸ்டருக்காக திரும்பிய போது வேலைநிறுத்தம் வந்து பல்கலை மூடப்பட்டது.விடுதிகளை விட்டு வெளியேறுமாறு நோட்டிஸ் ஒட்டிவிட்டார்கள்.எல்லோரும் போய்விட யாழ்மாணவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டோம்.முகமாலையில் தொடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலை அடுத்து பாதை மூடப்பட்டதால் எமக்கு வீடுகளுக்கு செல்ல வழியேதும் இருக்கவில்லை.பல்கலைக்கு வெளியே அறைகளை அவசரமாய் பார்த்து எங்களை திணித்துக்கொண்டேம்.ஏரியாவே வெறிச்சோடிப்போய் இருந்தது.பொழுது போவது மிகக்கடினமாக இருக்கவே வவுனியாவில் இருந்த நாயகனின் சகோதரி வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தோம்.சிரிப்பும் கும்மாளமுமாய் சிலநாட்கள் நகரமுதல் அந்த சம்பவம் நடந்தது.எமக்கு வெறும் ஆறே மீற்றர் தொலைவில் கிளைமோர் வெடித்தது.சிதறிய உருக்கு கோளங்கள் பெரும்பகுதியை அரணாக நின்ற வாகனம் ஒன்று தடுத்துக்கொண்டடலும் அதையும் மீறி இரு கோளங்கள் மங்கோவை தாக்கின.எல்லோரும் துடித்துப்போனோம்.சம்பவ இடத்தில் நின்ற அந்நியர்கள் நாமே என்றதால் பிரச்சினை பேயாய் விரட்டியது.நாயகனின் சகோதரியிடம் அவனை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு கொழும்புக்கு மாறினோம்.மொறட்டுவையில் தங்க இடமில்லாது தனித்து நின்றபோது கண்டுகொள்ளாது வீடுகளுக்கு ஓடிய குறிப்பிட்ட சில வவுனியா சகமட்ட பேர்வழிகள் விடயமறிந்து வைத்தியசாலைக்கு சென்று ஓடியதற்காக எங்களை தூற்றினார்கள்.அங்கே மங்கோவை சொந்த சகோதரனைப்போல கவனித்துக்கொண்டிருந்த நாயகனின் சகோதரியின் மனம் நோகும்படி மங்கோ வார்த்தைகளை வெளிவிடும்படியாக தூண்டிவிட்டார்கள்.மீள கட்டுப்பெத்தைக்கும் வந்து ஊளையிட்டார்கள்.

நடந்த சம்பவம் வழக்கிட்ட காரிகையின் தந்தைக்கு மட்டத்தின் வீணை மூலமாக போனது.அதே நேரம் வ.இ.காரிகையும் மீள பல்க்லையில் இணைந்து கொள்வதற்கான காலமும் நெருங்கிக்கொண்டிருந்தது.வவுனியாவில் நாங்கள் சிக்கிக்கொண்ட விடயம் கனதியானது என்பதை ஊகித்த அவன் ஆழமாக வலைபின்ன தொடங்கினான்.மகளின் மனவியாதியை உண்மை என நம்பி அதற்காக அப்பாவி இளைஞர்கள் வாழ்க்கையோடு விளையாடப்போகிறோம் என்பது அவனுக்கு தெரிந்திருகவில்லை.

பல்கலைகழக தலைமை கவுன்சிலரான வணிகதுங்க என்ற அரைலூசன் முன்பு வழக்கிட்ட காரிகையோடு வந்தமர்ந்த தகப்பன்காரன் "எனது மகளுக்கு மீளவும் பிரச்சினை வரக்கூடாது" என்று கேட்டுக்கொள்ள வணிகதுங்கவின் கரங்கள் மேசையில் இருந்த சங்கம புத்தகத்தை நோக்கி நீண்டன.

......................................................(வருவாள் வ.இ.கா)


************************************

புலனாய்வுக்குறிப்புக்கள்-

மங்கோவுக்கு அடிவிழுந்ததன் உண்மையான காரணத்தை நீண்டகாலமாக தேடிக்கொண்டிருதேன்.பல்கலை இறுதி நாட்களில் அதற்கான விடை சிக்கியது.வழக்கிட்ட காரிகைக்கு ஒரு சகோதரன் இருந்தான்.குரே பார்க்கில் இருக்கும் சிங்கள பெடியளோடு பழகும் வாய்ப்பை பெற்ற அவன் தமக்கையின் கல்வியை சிலர் குழப்பிவிட்டதாக கதையோடு கதையாக செண்டெமெண்ட் ரசம் கலந்து போட்டிருக்கிறான்.ஆத்திரப்பட்ட சிங்கள பெடியளிடம் மங்கோ ஒவ்வொரு வெள்ளியும் கோவிலுக்கு வருவான் என்ற விடயத்தை சொல்லி அழைத்துப்போய் எட்டநின்று ஆளைக்காட்டிவிட்டு நழுவியிருக்கிறான்.அடிக்க வந்தவர்கள் மீது கெமிக்கல் சசி தாக்குதலை நடத்த ஓரிரு அடிகளோடு மங்கோ தப்பிவிட்டான்.அடித்தவர்களின் முதலாவது இலக்கு மங்கோ தான்.இரண்டாவதாக நான் இருந்திருக்கலாம்(வழக்கிட்ட காரிகை தனது படிப்பை குழப்பியவனாக என்னையும் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில்).அப்படியெனில் "சுகந்தமாற எங்கே" என்று கேட்டது உண்மையாக இருந்திருக்கலாம்.ஆனால் என்னை அடிக்கவந்தவர்கள் தன்னை அடித்துவிட்டதாக மங்கோ குறிப்பிட்டதுதான் தவறாகிவிட்டது.பின்னாளில் வழக்கிட்டகாரிகையின் சகோதரன் செய்ததும் நியாயமாகவே பட்டது.எனக்கு ஒரு அக்கா இருந்து இவ்வாறான குற்றச்சாட்டை ஒருவன் மீது தெரிவிக்கும்பட்சத்தில் நானும் அவன் செய்ததைத்தான் செய்திருப்பேன்.

0 comments: