வழக்கிட்ட காரிகை-05


காவல்துறை நிலையத்தில் உம்சாண்டியின் சைக்கோ தந்தை கொடுத்த "கொலை மிரட்டல்" முறைப்பாட்டை ஏற்று என்னையும் அலியப்பாவையும் பிடித்து செல்லவென நான்கு போலீசார் காலை 7 மணிக்கெல்லாம் பல்கலை வாசலில் வந்திறங்கிவிட்டனர்.இடியே விழுந்தாலும் காதருகே கிளைமோர் வெடித்தாலும் காலை 8.30க்கு பின்னரே தூக்கம் கலையும் நானும் சன்ராவும் நடப்பதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தோம்.காவல்த்துறையை உள்ளே அனுப்ப முடியாது எனக்கூறித்தடுத்த பல்கலைக்கழக காவலர்கள் எம்மை பிடிக்கவென விடுதிக்குள் இறங்கினார்கள்.ஆனால் எமது அதிஸ்டம் அவர்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.சில மாதங்களுக்கு முன் நடந்த உள்மோதலில் ஈடுபட்ட சிங்கள மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துணை போயிருந்த அவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கடுப்பில் இருந்தார்கள்.தமது ஆதிக்க பகுதியான விடுதிக்குள் நுழைந்து இரு மாணவர்களை அழைத்துச்செல்வதை விரும்பாமல் விரட்டிவிட்டார்கள்.நடந்தது எதுவுமே அறியாமல் வெளியே வந்து விடயம் தெரிந்து அதிர்ந்து போனோம்.விரிவுரையாளர்களுக்கும் தகவல் தெரிந்திருந்தது.அரை விசரன் வணிகதுங்க கூப்பிட்டு கடிந்து கொண்டான்.மதிய வேளை அவசரமாய் 7ஜி குழுமம் கூடியது.மீள காவல்த்துறை வர முதல் நாமாகவே சென்று விடுவது நல்லது என முடிவானது.அடுத்த அரை மணிநேரத்தில் காவல் நிலையத்தில் நின்றோம்.



முறைப்பாடு ஒரு தாளின் இரண்டு பக்கங்களிலும் தமிழில் எழுதப்பட்டிருந்தது.தமிழே தெரியாத நிலைய பொறுப்பதிகாரி உள்ளீட்டை "பெண் மீதான துஸ்பிரயோகம் மற்றும் வீடு புகுந்து கொலை மிரட்டல்" என எழுதி கீழே ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்.அருகே இருந்த பெண் பொலீஸுக்கு உம்சாண்டியின் தந்தை கையூட்டு கொடுத்திருக்க வேண்டும்.எங்களை பிடித்து உள்ளே போட வேண்டும் என அடிக்கடி பொறுப்பதிகாரிக்கு சொல்லிக்கொண்டு இருக்க உசாரான அலியப்பா அகலமான வாயை திறந்து புன்னகைத்தபடி வரிக்கொரு "சேர்" போட்டு குழைய தொடங்கினான்.அந்த புன்னகையில் மயங்கிய பொறுப்பதிகாரி முறைப்பாட்டை கையில் கொடுத்து மொழிமாற்றி சொல்லும் படி பணித்தார்.அதை தகப்பனார் சொல்லச்சொல்ல மகள் எழுதியிருக்க வேண்டும் என ஊகித்துக்கொண்டோம்.பலவிதமான குற்றச்சாட்டுக்கள் நிரம்பியிருந்த அவ்முறைப்பாட்டில் இறுதிப்பந்தி எம்மை அவசரகால சட்டத்தில் பிடித்து போடக்கூடியவகையில் வடிக்கப்பட்டிருந்தது."வட பகுதியை சேர்ந்த தீவிர நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக அறியப்படும் இவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்" என்றிருந்த அந்த வரிகளை அலியப்பா தயங்கி தயங்கி மொழிமாற்றி சொல்லிவிட்டு பொறுப்பதிகாரியை பார்த்து "சேர்ர்ர்ர்ர்ர்ர்" என்று இழுத்தான்.எம்மவர்களின் தனிப்பட்ட விரோதத்துக்காக போட்டுக்கொடுக்கும் இயல்பை பலதடவை கண்டதாலோ என்னவோ பொறுப்பதிகாரி இறுதி வரிகளை படித்தவுடன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்.ஜெயவர்த்தன பல்கலையில் பயின்றிருந்த அவர் நடந்திருக்கக் கூடியதை சரியாக ஊகித்திருப்பார் போலும்.நீண்ட பிரசங்கம் ஒன்றை நடத்தி "நான் என்றதால் தப்பித்தீர்கள்.வேறு யாராவது என்றால் இப்படி எழுதியிருப்பதைப்பார்த்தால் உள்ளே போட்டிருப்பார்கள்.கவனம்" என்று முடித்து செல்ல அனுமதித்தார்.


துள்ளிக்குதித்து ஓடி வந்த நாம் பிரச்சனைகள் ஓய்ந்தனவென்று முடிவெடுத்து என்று மீள கமெராவை தூக்கிக்கொண்டு நின்று போன படத்தை எடுக்க தொடங்கினோம்.ஒரு பக்கமாய் "புறஜெக்ட் ரிப்போட்" கொடுக்க வேண்டிய திகதி நெருங்கிக்கொண்டிருந்தது.இரவில் புரஜெக்ட் பகலில் படப்பிடிப்பு என்று தீயாக தூக்கம் மறந்து இயங்கிக்கொண்டிருந்தோம்.2007 மார்கழி மாதம் கிளைமோரில் சிக்கி வவுனியாவில் இருந்து ஓடிவந்தோம்.2008 ஜனவரியில் அலியப்பாவை தூக்கிக்கொண்டு போய் தெகிவளை குடுக்காரன்கள் பிரிச்சு மேய்ந்தார்கள்.என்னை தேடிக்கொண்டிருந்தார்கள்.இன்னொரு பூச்சி மட்டக்களப்பில் இருந்து எச்சரிக்கை கடிதம் வரும் ஆளணி அம்போடு மிரட்டிக்கொண்டிருந்தான்.2008 மார்ச்சில் கட்டுப்பெத்தை குடுகாரன்கள் அலியப்பாவும் சிரிப்பு ரவுடி,சௌந்தர் வெளியே சாப்பிட போகும் போது தட்டிப்பிழிந்து தக்காளி சட்னி வரவைத்து அனுப்பி வைத்தார்கள்.இது போதாது என்று கூடவிருந்த ரிஸ்மி வேறு கலவரம் செய்து எக்குத்தப்பாய் சிங்கள மாணவர்களிடம் போட்டுக்கொடுத்துவிட்டான்.இப்படி "சனியன் உங்கட ஹொஸ்டல் றூமுக்க படுத்திருக்குதோ மச்சான்?" என்று பிறர் கேட்கும் அளவுக்கு அடி அடியாய் வாங்கிக்கொண்டிருந்தோம்.நடப்பதை பார்த்து கலங்கிப்போன அச்சுதனும் வெறிக்குட்டியும் ஒரு நடுட இரவில் வீட்டுக்கு ஓடிப்போய் ஒரு மாதம் கழித்துத்தான் விடுதிக்குள் வந்தார்கள்.இப்படியான ஒரு நிலையில்த்தான் நாங்கள் படம் எடுத்துக்கொண்டிருந்தோம்.புரஜெக்ட் றிப்போட் எழுதிக்கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராமல் எனக்கு பல்கலை கழக விசாரணைக்கு அழைப்பு வந்தது.கமல்சுக்கும் வந்திருந்தது.கூடவே மங்கோலியனுக்கும்.



பல்கலைக்கழகத்தில் ஒழுக்காற்று பிரிவால் நடத்தப்பட்ட விசாரணை நடந்த ஒரு மணித்தியாங்களும் என் வாழ்நாளில் மிக அசிங்கமானவை.எனக்கு பேசவே சந்தர்ப்பம் தராது மலையாக குற்றச்சாட்டிக்களை அடுக்கிய சிங்கள விரிவுரையாளர்கள் ஆளாளுக்கு சிக்மண்ட் பிராய்ட்டை மிஞ்ச முயன்று கொண்டிருந்தார்கள்.நான் ஏன் அப்படி செய்தேன் என்பதற்கான உளவியல் காரணங்களை வாயெல்லாம் அசிங்கமாய் லிப்ஸ்டிக் குதப்பிய ஒரு பெண் சிங்களவிரிவுரையார் வரிசைப்படுத்தினார்.நான் மறுத்த போது ஒப்புக்கொண்டால் தண்டனை குறைவு என்று சொன்னாள்.எனக்கு சினிமாவில் பார்த்த விசாரணை காட்சிகள் தான் நினைவுக்குள் வந்தன."இதெல்லாம் ஒரு கம்பஸ்,இதெல்லாம் ஒரு டிகிரி" என்ற மனநிலையில்தான் விசாரணைக்கு வரும் போது இருந்தேன்.நீள்வட்டமாக மேசை போட்டு சுற்றியிருந்து மிரட்டிய மிருகங்களை பார்த்ததும் வெள்ளைக்கொடியை தூக்கி விட்டேன்.இறுதியில் "உனக்கு தண்டனை வழங்கப்படும்.அதை பிறகு சொல்கிறோம்" எனச்சொல்லி சில வாரங்களுக்கு என்னை உள நெருக்கடிக்குள் புதைத்தார்கள் அந்த கவுன்சிலிங் மேதைகள்.




முடிவில் புறஜெக்ட் கொடுக்க முடியாதபடி ஒரு மாதம் தடை கிடைத்தது.ஆயினும் பல்கலைச்சூழலிலும் வெளியேயும் தமிழ் மாணவர்கள் அப்போது எதிர்நோக்கிய மிகச்சிக்கலான நிலையை கருத்தில் கொள்ளுபடி இரக்க மனம் படைத்த விரிவுரையாளர்கள் கேட்டதையிட்டு அது பின்போடப்பட்டது.கமல்ஸும் நானும் விசாரணை விடயங்கள் பற்றி பரஸ்பரம் பரிமாறிக்கொண்டோம்.என்னை முதல் குற்றவாளியாகவும் கமல்சை இரண்டாம் நிலை குற்றவாளியாகவும் கருதி இருக்கிறார்கள் என்று புரிந்தது.மங்கோலியன் எப்படி தப்பினானோதெரியவில்லை."எனக்கு தெரியாது.அவர்களை கேளுங்கள்" என்று விசாரணையில் சாதித்திருப்பான் போலும்.இறுதி வரை அவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.



2008,ஜூன் மாதம் கட்டுப்பெத்தையில் நடந்த கிளைமோர் வெடிப்பு பேரனர்தமும் பின் நிலவிய பயங்கர சூழலும் எங்களை வெள்ளவத்தை அறைகளுள் முடக்கிப்போட்டன.செப்ரெம்பரில் லண்டன் வந்த பின் நானும் கமல்சும் இவ்விடயம் தொடர்பில் அலசத்தொடங்கினோம்.என்னென்ன வழி முறைகள் ஆப்பு அடிப்பதுக்கு உண்டோ அவ்வழிமுறைகள் எல்லாவற்றையும் பரிந்துரைத்த கொழும்பு "டமில்" சகமட்ட பேர்வழிகள்,சைக்கோ ஜூனியர்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்தன.Material department உதவி விரிவுரையாளராக இருந்த போது மங்கோவுக்கு உதவப்போய் சிக்குப்பட்ட சீனியர் ஒருவரிடமிருந்தும் பெறுமதியான தகவல்களை உருவினோம்.மங்கோவின் தந்தையுடன் கூடிக்குலாவி வழக்கிட உறுதுணையாக இருந்த வீணைகள்,வதையன்கள் பற்றியும் தகவல்கள் கிடைத்தன.வேலைப்பழுவும் காலமும் அந்த அருவருப்பான நிகழ்வை மறக்கச்செய்திருந்தது.ஆயினும் சிங்கபுரிக்கு 2011 Januaryல் போன போது கேள்விப்பட்ட சிலவிடயங்கள் கோபத்தை கிளறி முதலாவது பாகத்தை எழுத தூண்டின.அதற்கு எதிர்வினையாக மங்கோ செய்த கீழ்தரமான செய்கைகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக இத்தொடரை ஐந்து பாகங்களாக எழுத தூண்டுகோலாக அமைந்தன.

{இத்தொடரின் நோக்கம் தனிநபர் தாக்குதலை நோக்கமாக கொண்டதல்ல.தனிநபர் தாக்குதலை தடுப்பதற்காக பல விடயங்களை தணிக்கை செய்து இருக்கிறேன்.உளப்பாதிப்பு கொண்ட பெண்களால் அப்பாவி ஆண்கள் சமுதாயத்தில் பல் பாதிப்புக்களை சந்திக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காகவே எழுதும்படி ஆனது}

பிற்குறிப்பு-காவல் நிலையத்திலிருந்து நானும் அலியப்பாவும் வெளியே வரும் போது அந்த பெண் பொலீஸ் அலியப்பாவிடம் வந்து தொலைபேசி இலக்கத்தை கேட்டுப்பெற்றுக்கொண்டாள்.காவல் நிலையத்திலிருந்து அழைக்காமல் பிரத்தியோக கைத்தொலைபேசி மூலமாக அடிக்கடி அழைத்து "மீள விசாரிக்க வரும்படி" சொல்லிக்கொண்டிருந்தாள்.7ஜி குழுமம் கூடி முடிவெடுத்து அலியப்பாவிடம் சொன்னது "மச்சான்! அவள் கூப்பிடுறது விசாரிக்க இல்லை.அவளுக்கு உன்னிலை ஒரு பிளானடா".பிறகென்ன வந்த ஒரு மாதத்துக்கும் அலியப்பா சிங்களத்தில் டூயட் பாடிக்கொண்டு திரிந்தான்.ஆயினும் இதுவும் ஒருவகையான பொறியாக இருக்கலாம் என கருதி இறுதி வரை சந்திக்க போகவில்லை.இவன் ஒரு வாய் வேட்டுப்பேர்வழி என முடிவெடுத்த அவள் தானாகவே தொடர்பை நிறுத்திக்கொண்டாள்.

-முற்றும்.


பெயர் - குழந்தைவேல் வசந்தன் அல்லது அலியப்பா/சன்ரா

வகை- சிங்கப்பூர் இஞ்சினியர் மாப்பிள்ளை

தொழில்-திட்ட முகாமையாளர் (PM)

உப தொழில்கள்- மாங்காய்,தேங்காய் தொடக்கம் ஜம்புக்காய் வரை களவாக பிடுங்கி உண்பது.முதலை பிடிப்பது,வீண் வம்பிழுத்து அடிப்பது மற்றும் அடிவாங்குவது.

வாழ்நாள் சாதனைகள்- மல்லாவியில் சும்மா போன முதலையை கவிட்டுப்போட்டு கதற கதற அடித்து கொண்றது

உடல் அமைப்பு- மலைப்பாம்பு போல பருத்த புயங்களுக்கும் உராங்குடான் போண்ற உறுதியான தேள்களுக்கும் பிதுங்கிய வயிற்றுக்கும் சொந்தக்காரன்.

நிறம்- அவித்த ஆப்பிள் பழ நிறம்.

எதிர்பார்க்கும் வரன் - கொஞ்சம் கூட படிப்பறிவு இல்லாதவராயும் காதில் என்ன பூ வைத்தாலும் நம்புபவராயும் அதிக எடை கொண்டவராயும் இருத்தல் அவசியம்.

சீதனப்பெறுமதி - 20 கோடி (Exclude vat)

பி.கு- சிவந்த அழகிய பெண்கள் எனில் ஸ்கொலர்சிப் வழங்கப்பட்டு கணிசமான அளவு தள்ளுபடி கிடைக்க வாய்ப்புண்டு.




பெயர்- கனகசிங்கம் கமலரூபன் / அப்பாஸ்

வகை- இங்கிலாந்து ரோயல் குடும்ப மாப்பிள்ளை

தொழில்- அப்படி என்றான் என்ன?

வாழ்நாள் சோகம்- கூடவிருந்த மங்கோ உம்சாண்டி விசயத்தில் கோர்த்து விட்டதும் "யாழ்ப்பாணமும் பெண்களும்" என்ற ஆய்வுக்கட்டுரையை எழுத முடியாமல் போனதுவும்.

உடல்கட்டமைப்பு- யுத்தடாங்கி போல உறுதியான தசைகளையும் தண்ணி பவுசர் போல மென்மையான வண்டியையும் கொண்டவர்.

தோல் நிறம்- யாழ்ப்பாண பெண்களுக்கு மிகப்பிடித்தமான கோதுமை நிறம்.

மணவாட்டிக்கு இருக்கவேண்டிய தகைமைகள்- காதுகேளாதவராக இருத்தல் அவசியம்.(மாப்பிள்ளை படுக்கும் போது நிலக்கரி ரயில் தலைக்கு மேலால் ஓடுவது போலவும்,டிஸ்கவரி சனலை ஒலிபெருக்கி வைத்து பார்ப்பது போலவும் அருகில் இருப்பவருக்கு தோண்றுமளவுக்கு குறட்டை ஒலியை உருவாக்குவார்.)

சீதனம்- பணமாக எதுவும் தேவையில்லை.பொருளாக ஒரு லோட் புளுக்கொடியலும் ஒரு மாதம் கல்லால் குத்திச்சாப்பிட தேவையான தேக்கங்காய்களும்.

சிறப்பு இயல்புகள்- தூங்கி களைப்பாகி அந்த களைப்பை போக்க மறுபடியும் தூங்குமளவுக்கு சுறுசுறுப்பானவர்.சாப்பாட்டின் முன் சாப்பாடு & சாப்பாட்டின் பின்னுணவு என பல ஆகாரங்கள் எடுக்குமளவுக்கு ஆசாரம் மிக்கவர்.





பெயர்- சசிக்குமார் பத்மனாதன்

வகை- கனேடியன் PR* மாப்பிள்ளை (*யாழ்ப்பாண பெண்கள் கவனத்துக்கு)

தொழில்- MSc செய்வது.ரெஜிபோமில் வெயிட் அடிப்பது.

வாழ்நாள் சாதனை- 1999 ல் பீரங்கிப்பிரிவுக்கு எறியம் படிப்பித்தது.2004 ஆம் ஆண்டு ரஜீந்திரதாசை பிடிக்க வந்த முனிப்பேய்க்கு வெறும் உடம்பை காட்டி அதைmவெருண்டோட செய்தது.

உருவ அமைப்பு- மனித உடலில் உள்ள 206 என்புகளையும் உயிருடன் உள்ளபடியே காண்பிக்க வல்ல விந்தையான உடலமைப்பு இவருடையதாகும்.மெடிகல் மிராகிள்!

சரும நிறம்- தமிழ்ப்பெண்களின் உள்ளத்தை கொள்ளையடிக்க வல்ல தங்க நிறத்தில் மின்னும் கவர்ச்சியான சருமம்.

திருமதி சசிக்குமார் எப்படி இருக்க வேண்டும்- ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உடல் வெளிறியவராகவும் 25 கிலோ எடைக்கு மிகாதவராயும் இருத்தல் வேண்டும்.

சீதனம்- இலங்கை ரூபாய்கள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது.ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்கள் அல்லது இரண்டு மில்லியன் கனேடிய டொலர்கள்.




பெயர்-பெருமாள் சௌந்தராஜன்

தொழில்- அண்டகவரில் இருந்து உளவு பார்த்தல் (விஸ்வரூபம் கமல் போல)

பிடித்தது- கலெக்சிS3 ,பியர்,வைன்.விஸ்கி,சிக்கன் ஹொட் விங்க்ஸ்

பிடிக்காதது- ஆப்பிள் ஐபோன்,அட்வைஸ்,காசை தந்துவிட்டு திருப்பி கேட்பது.

விரும்பி அணிவது- பச்சை நிற செருப்பு.ஒரேஞ்ச் நிற ஜம்பர்,பிங்க் கலர் யட்டி

வாழ்நாள் சாதனை- 10 மீற்றர் தொலைவில் இருந்த அயல்வீட்டில் தண்ணி அடித்துவிட்டு வீடு வந்து சேர 5 மணித்தியாலங்கள் எடுத்ததுக்கொண்டது.

சரும நிறம்-பிளாக் லேபிலில் பெப்சியை அரைக்கு அரையாக கலக்கும் போது வரும் கலவை நிறம்.

உடல் தோற்றம்- சிவாஸ் ரீகல் போல வளைவுநெளிவுகளையும் பட்வைசர் கான் போல பளபளப்பையும் மக்னம் போல் "கிக்" கையும் பார்பவருக்கு தருவதாகும்.

எதிர்பார்க்கும் வரன்-கள்ளுத்தவறனைகாறர்,சாராயக்கடைக்காரர்,கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் குடிவழிப்பிறந்த குலமகளாய் இருத்தல் வேண்டும்.

சீதனம்- வீடு,நிலம்,பணம் எதுவுமே வேண்டாம்.முதலிரவுக்கு பாலும் பழமும் கொடுத்தனுப்பாமல் வைட் டயமண்டும்,சிக்கன் பைற்சும் அனுப்பிவிட்டால் காணும்.





பெயர்- மொறட்டுவை தமிழ்ப்பெண்
(Ex-சரோஜாதேவி,பத்மினி,வித்யா,மீனா,ரேகா,கன்சிக்கா,தீபிகா)

(எங்கள் அழகிகளைப்பற்றி எழுதினால் "போடுவோம்" என வாளிகள் பலவழிகளாலும் மிரட்டியதால் பயந்து பொதுவாக பெயர் குறிப்பிடாமல் போடும்படி ஆகிவிட்டது.)

குணம்- அடக்கம்,ஒடுக்கம்,குடும்பப்பாங்கு,நாற்குணம்

தோற்றம்- சில பெண்ணுங்களை பார்த்த உடனேயே பிடிக்கும்,இன்னும் சிலதை பார்க்க பார்க்க பிடிக்கும்.கட்டுப்பெத்தை கன்னிகளை பார்க்காமலே பிடிக்கும்.

பிடித்த ஆண்கள்- தண்ணி போடாதவர்கள்,சத்தமாக பேசாதவர்கள்,குனிந்து நடப்பவர்கள்,பேசும் போது கட்டை விரலால் கோலம் போடுபவர்கள்,நோட்ஸ் போட்டோ கொப்பி அடித்து தருபவர்கள்,பெண்களின் புத்ததக பாரம் சுமப்பவர்கள்,விடுதி ஆண்களின் உள்வீட்டு விவகாரங்களை போட்டு கொடுப்பவர்கள்,காலை "குட் மோர்னிங்கும்" மாலை "குட் நைட்டும்" குறுந்தகவல் அனுப்புபவர்கள்.பேரூந்தில் சீட் பிடித்து தருபவர்கள்,கன்ரீனில் பால்,யோக்கட்,ஐஸ்கிறீம் வாங்கி தருபவர்கள் என நீளும்.

சீதனம் விபரம் - "நாங்கள் சீதனம் தரமாட்டோம்.மாறாக எங்களை மணப்பதானால் ஆண்கள் எங்களுக்கு சீதனம் தந்தாக வேண்டும்" (பிரசித்தி பெற்ற கட்டுப்பெத்தை தமிழ் பெண்களின்  மகுடவாக்கியம்)

பல ஆண்கள் தங்களது விபரங்களை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தபோதிலும் மேற்சொன்ன நால்வரது விரபரங்கள் மட்டும் பிரபல்ய அடிப்படையில் ஆசிரியர் பீடத்தால் தெரிவு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளன.ஏனையோர் மனம்தளராது காத்திருக்கவும்.உங்களுக்கேற்ற மணப்பெண்ணை பிடித்து தரும்வரை கனாக்காலம் ஓயப்போவதில்லை.